Showing posts with label thala. Show all posts
Showing posts with label thala. Show all posts

Sunday, 27 April 2014

நான் அஜித் ரசிகன்-1

என்னுடைய பால்ய காலத்தில் வீட்டில் ஒளியும் ஒலியும் என்றால் எல்லோரும் ஆஜர் ஆகிவிடுவோம். அப்பொழுது தொடர்ந்து நான்கு வாரங்களாக அந்த பாட்டை போட்டு கொண்டே இருந்தனர்.முதல் முறை கேட்டபோதே பிடித்துவிட்டது என்றாலும் மீண்டும் மீண்டும் பார்த்தபொழுது பாட்டைவிட அதில் வந்த நாயகனை மிக பிடித்துவிட்டது . அந்த பாட்டு "உன்னை பார்த்த பின்பு நான்" என்றால் பாடல் காதல் மன்னன் திரைப்படத்தில் இருந்து. அதற்குமுன் எல்லாம் எல்லோரையும் போல விஜயகாந்த் சண்டைக்காக பிடித்ததும் பின்னர் எல்லோரையும் போல ரஜினிகாந்தை பிடித்தது மாறிப்போனது என்றல்லாமல் ரஜினிக்கு பிறகு ஆசை நாயகன் அஜித் என்று ஆனது.பின்னர்  தூர்தர்சனில் பவித்ரா (அமராவதி போட்டது போல நினைவே இல்லை) படம் கூட  சலிக்காமல் எத்தனை தடவை போட்டாலும் பார்த்த நினைவு எல்லாம் வருகின்றது கொஞ்சம் நினைவோட்டத்தை ஓட்டி பார்த்தால்.இவைகள் ஐந்தாவது படித்த போது என்று நினைக்கின்றேன், 1998 . 



பின்னர் அமர்க்களம்(1999) திரைப்படத்தை தஞ்சை சாந்தி  திரைஅரங்கில் கண்ட பொழுது தான் மிக பிடித்து போனது, மூச்சு விடாம பாடுன  பாட்டு அதுக்கு அஜித் பயங்கரமா நடிச்சு இருக்காரு. சண்டைலாம் சூப்பர போட்டுருக்காரு. ரகுவரன் கூட பேசுவாரு பாரு  ஆவ்வூனு நண்பர்களிடம் பேசிய ஞாபகம் இப்பொழுது கடந்து போனது தெரிகிறது. இதற்க்கு முன் வந்த வாலி திரைப்படம் கூட தஞ்சை லோக்கல் கேபிள் டிவி ஜென் தொலைகாட்சியில் தான் பார்த்தேன் என்று நினைக்கின்றேன்.


அல்டிமேட் ஸ்டார் தல ஆன போது தான் உச்சமானது , தீனா (2001) எட்டாவுது படித்தபொழுது படத்தின் ஸ்டில் வந்த பிறகு  சில நண்பர்கள் தேள் செயின் போட்டுவருவது அதை பார்க்கும் பொழுது எனக்கு போட்டு கொள்ள ஆசையாக இருக்கும் ஆனால் அது இறுதி வரை நான் போட்டு கொள்ளவில்லை. படம் பார்க்காமலையே தீனா படத்தை பற்றியே பேசிய காலங்கள். படம் பார்த்த நண்பனை அருகில் அமர்த்தி முழுபடத்தையும் சொல்ல சொல்லி கேட்டு கொண்டே மனதில் பார்த்து கொண்டு இருந்த நேரம். அப்பொழுது தான் இன்னொரு கூட்டம் ப்ரெண்ட்ஸ் படத்தை பற்றி பேசி கொண்டு இருக்கும் போது. முதல் முறை போடா அஜித் தான் சூப்பரு என்றும் அவர்கள் ஹ்ம்ம்க்கும் இளைய தளபதி படத்தை பாருங்கடா என்று எங்களை பிரைன் வாஷ் அப்பொழுதே சண்டை ஆரம்பிக்கும் முன்னேயே கூற தொடங்கி இருந்தனர்.



பின்னர் வந்த சிட்டிசன்(2001) படம் எல்லாம் அவரின் பலவிதமான கெட் அப் எங்களின் விவாதங்களுக்கு போதுமானதாக இருந்தது. அப்படங்களை எல்லாம் நான் பார்க்கவில்லை ஆனால் நான் பெரிதாக வியக்கும் எங்களின் சீனியர்கள் , பஸ் ஸ்டாண்டில் கெத்தாக திரிபவர்கள் , ஆட்டோ ஸ்டாண்டில் உள்ளவர்கள் என்று அனைவரும் அஜித் விரும்பிகளாக தீனா ஸ்டில் அவர்களின் நோட் அட்டைகளிலும் , ஆட்டோ முன்  கிளாஸிலுமாக இருந்தது பெருமிதம் கொள்ளவைக்கும்.தினகரன் , தினத்தந்தி பேப்பர் சினிமா பக்கம்  என்னிடம் நீண்ட நேரம் அல்லோலப்படும்.இதன் பிறகு வந்த ரெட்(2002) படத்திற்கு  தஞ்சையில் அதுவரை வைத்திராத அளவுக்கு கட்டவுட்கள் வைத்து நகரையே பிரமிக்க வைத்து இருந்தனர் என்ற பேச்சு தான் அதிகமாக இருந்தது. அப்படத்தின் தோல்வி பயங்கரமாக  ஓட்டபட்டோம் அதுவும் நடனம் என்று ஓட்டும் போது எதுவும் சொல்லிக்கொள்ளாமல் கிட்டத்தட்ட ஓடி போய்விட தோன்றும்.தொடர்ந்து வந்த ராஜா(2002) பட தோல்வி அதற்க்கு மேல் ஓடவைத்தது எங்களை அதிலும் சிலர் எங்க தளபதிய வச்சு இவர் தாண்டா துள்ளாத மனமும் துள்ளும் படத்த எடுத்தாரு இப்போ உங்க ஆள வச்சு எடுத்தாரு ஊத்திகிச்சு என்று கூற , நாங்களோ அடேய் இந்த படத்துல உங்க தளபதி நடிச்சு இருந்தாலும் ப்ளாப் தான் என்று எவ்வளவோ மல்லுகட்டி கூறினாலும் இறுதிவரை அந்த நண்பன் ஒற்றுகொள்ளவே இல்லை.


எல்லோருக்கும் நாங்களும் வில்லன் ஆகிவிட்டோம் வில்லன்(2002)  வருவதற்கு முன்னே. ஆனால் வில்லன் எங்களை ஹீரோ ஆக்கிவிட்டது வருகைக்கு பிறகு. அப்பொழுது உடன் வந்த பகவதி நாங்கள் ஓட்டுவதற்கு வசதியாகவும் வில்லன் படத்தின் இரட்டை வேட நடிப்பு பெருமிதம் கொள்ள வைக்கவும் நன்றாக இருந்தது. ஓரளவுக்கு நன்கு புரிந்து கொண்டு விவாதம் செய்யும் போது டெக்னிகலாக திரைகதை யுக்திகளை எடுத்து கூறி பேச துவங்கிய காலங்கள். அதுக்கு ஏற்றது போல வில்லன் படம் எங்களுக்கு அமைந்தது. அது போலவே தினகரன் சிறந்த நடிகர் அவார்டும் , பிலிம் பேர் அவார்டும் அவ்வருடத்தில் அவருக்கே கிடைத்தது அப்படத்திற்காக. தப்பு தண்டா பாடல் பற்றி இங்க பேச வேணாம் அதுவும் ஒரு விவாதம் ஆனது அப்படத்தில்.

பின்னர் ஒருவருட இடைவெளிக்கு பிறகு 2003 தீபாவளி வெளியீடாக வந்த ஆஞ்சநேயா படத்தின் கதி ஊரே அறியும். ஆனால் அதற்க்கு முன் நாங்கள் தந்த அலப்பரைகள் வல்லரசு டைரக்டர் படம் செம்மையா இருக்க போகுது என்றெல்லாம் ஹைப் கொடுத்துட்டு இருந்தோம். படம் வெளியானா அடுத்த நாள் பள்ளிக்கு செல்லாமல் நண்பர்கள் படை சூழ தஞ்சாவூர் படம் பார்க்க செல்லும் போதே திருமலை என்று சிலர் , நாங்க தல படம் தான் என்று கூற , மூன்றாவுது அணி பிதாமகன் என்றது. அங்கு போய் முடிவு செய்து கொள்ளலாம் என்று சென்றோம். தஞ்சை சாந்தியில் தல படம் கமலாவில் பிதாமகன் சற்று அருகே இருந்த ஜுபிடெரில் திருமலை. தல ரசிகர் போல தெரிந்த ஒருவரிடம் பாஸ் படம் எப்படி என்று கேட்க அவரோ எதுவும் சொல்லாமல் பார்த்துவிட்டு தலையை குனிந்து கொண்டார்.பின்னர் வம்படியாக கேட்க, நேத்து பாக்குறப்போ நல்லா இருந்துச்சு ஆனா இன்னைக்கு திரும்ப வந்து பார்த்தேன் என்று இழுக்க நாங்கள் பாஸ் இன்னு ஷோ முடியலை பாஸ் என்று பதறினோம் அவரோ ஆமாங்க உள்ள விஜய் ரசிக நண்பர்களை அழைத்து வந்தேன் ஒட்டுறானுங்க அதான் வெளிய வந்துட்டேன் என்று கூறி எங்களை இறக்க வைத்து விட்டார்.அதை கேட்ட மற்ற குரூப் நண்பர்களோ சிரித்து கொண்டே எங்களை பார்த்தனர் ஆனால் விடவில்லையே கடைசி வரை போராடி திருமலை அல்லாமல் பிதாமகன் சென்று.அடுத்தநாள் வந்து ஆஞ்சனேயே தனியாக பார்த்தோம் பயத்தில். முதல் முறை நாங்கள் சொல்லி கொண்டும் விட்றா தல அடுத்த படத்துல பட்டய கிளப்பிடுவாரு என்று சொல்லிவிட்டு ஒரு கட் அவுட்டை பார்த்தோம் அதில் இருந்த வாசகம் எங்களை கூட நினைத்து நினைத்து சிரிக்க வைத்து விட்டது வெளிய சொல்லலையே அதை. அந்த வாசகம்,
"திருமலையை தூக்க வரார்டா எங்க ஆஞ்சநேயா "

இந்த காலகட்டத்தில் தான் சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டும் நான் அதை நோக்கி தான் சென்று கொண்டு இருக்கின்றேன் என்று வெளிப்படையாக கூறினார் அஜித். அதனாலையே எல்லோரின் கோபங்களுக்கு உள்ளானார் ஆனால் ரசிகர்கள் அவருக்கு உற்ற துணையாக இருந்தனர். ஜி பட படபிடிப்பு எங்கள் திருவையாறில் நடந்தது வெறும் நான்கு மணிநேரம் எங்கள் ஸ்ரீனிவாச ராவ் மேல் நிலை பள்ளி பின்புறம் உள்ள காவேரி ஆற்றில். அப்பொழுது தான் அஜித்தை நேரடியாக முதலும் இறுதியுமாக நான் கண்டது. ஆற்றில் அங்கங்கே ஓடி கொண்டு இருந்த நீரை முகத்தில் அவ்வப்போது அள்ளி தெளித்து கொண்டு நடன காட்சியில் ஆடிக்கொண்டு இருந்தார். நாங்கள் பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு அந்த படபிடிப்பை கண்டு களித்து கொண்டு இருந்தோம்.

கில்லி திரைப்படம் மாபெரும் வெற்றியை சுவைத்து கொண்டு இருந்தநேரம் , அஜித் பிறந்தநாள் மே 1  அன்று வெளிவந்த ஜனா படுதோல்வியை சந்தித்தது. கோடைவிடுமுறை என்பதாலும் +2 ஸ்பெஷல் கிளாஸ் வேறு இருந்த நெருக்கடியில் அப்படத்தை காண வாய்ப்பில்லாமல் போனது ஆனால் கில்லி படத்தை அந்நாட்களில் திரை அரங்கில் கண்டோம் படம் பிடிக்க கூடாது என்ற நினைப்பிலேயே கண்டேன் என்பதை இப்பொழுது நினைத்தால் கூட  சிரிப்பாக இருக்கின்றது. பின்னர் பள்ளி தொடங்கிய போது ஜனா படத்தை வம்படியாக எங்களிடம் சொல்லி சொல்லி வெறுப்பேற்றினர் நண்பர்கள். 


2004 தீபாவளி அட்டகாசம் வெளியீடு சரண் இயக்கம் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டு இருந்தது எப்போதும் இரட்டை வேடம் என்றால் அஜித் செண்டிமெண்ட் வொர்க் அவுட் ஆகும் என்று உறுதியை நம்ப வைத்த திரைப்படம் அட்டகாசம். 2002க்கு பிறகு அஜித்தின் வெற்றி படவரிசையில் இணைந்த அட்டகாசம் ரசிகர்கள் மதித்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இப்படத்தின் ஸ்டில் தான் இன்றைக்கும் கூட மிக பிரபலம். இப்படத்திற்கு பிறகு வெளியான அஜித் அவர்களின் எந்த திரைப்படத்திற்கும் திரைஅரங்கில் வைக்கப்படும் கட் அவுட்களில் அட்டகாசம் ஸ்டில் இல்லாமல் இருக்கவே இருக்காது. தல என்று அஜித்தை எல்லோரும் அழைக்க தொடங்கிய காலமும் அதுவே அதற்க்கு ஏதுவாக அமைந்த பாடல் ''தல போல வருமா ''. தஞ்சை யாகப்பா திரைஅரங்கில் வெளியான அடுத்த நாள் நண்பர்களுடன் சென்று மதியகாட்சிக்கு 12மணி முதல் டிக்கெட் கவுண்டரில் நின்று 2அடிக்கு குறைவான அகலம் கொண்ட கவுண்டரில் நீண்ட வரிசையில் மூச்சு விடகூட திணறி கொண்டு 2 மணிநேரங்கள் தவித்து சென்று , பரவசமாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடிய படம் . ரசிகர்களுக்காகவே அஜித் நடித்த அட்டகாசம்.


அஜித் - கே.எஸ் ரவிக்குமார் கூட்டணி மீண்டும் இணைகிறது , அஜித் மூன்று வேடங்களில் நடிக்கபோகிறார், ஏ.ஆர். ரஹ்மான் இசை , பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு .படத்தின் பெயர்  காட் பாதர் என்று தினசரிகளில் பரப்பாக செய்தி வெளி வரத்தொடங்கியது. அதே போல அந்நேரத்தில் வதந்திகளும் வந்தது அஜித் நடிக்கும் மூன்று வேடங்களில் ஒன்று  அரவாணி என்று கூட. அந்த பரபரப்பில் 2005 பிப்ரவரி ஜி திரைப்படம் வெளிவந்தது. அதே தஞ்சை யாகப்பாவில் முதல்நாள் அஜித் அவர்களின் திரைப்படத்தை முதல்முறையாக  திரைஅரங்கில் காண்கிறேன்(அன்று முதல் இன்றுவரை முதல் நாள் தான் பிறகு வெளிவந்த திரைப்படங்களுக்கு). ராஜா ,ஆஞ்சநேயா , ரெட் , ஜனா போன்ற படங்களை போலல்லாமல் இன்றைய அரசியல் யதார்த்தத்தை கூறியவகையில் எனக்கு பிடித்த படமே ஜி.  ஆனால் இதுவும் ஒரு தோல்வி படமாகவே அமைந்தது. எனக்கு இன்றைக்கும் இப்படத்தின் இயக்குனர் மேல் கோபம் தான் அவர் லிங்குசாமி. தன்னுடைய படங்கள் என்று அவர் ஜி தவிர ஒதுக்கி தான் பத்திரிகையில் பேசுவார் அவரின் தோல்வி படமான பீமாவை கூட பெருமையாக குறிப்பிடுவார் ஆனால் ஜி படத்தை பற்றி வாய் திறக்க மாட்டார். இப்பொழுது சிவா கார்த்திகேயேன் எப்படி மனம் கொத்தி பறவை என்ற திரைப்படத்தில் வேற்று கிரகத்தில் இருந்து ஒருவர் நடித்து இருப்பதை போன்று நடந்து கொள்வதை போல்.




                                                                                                                          தொடரும் ....

அடுத்த பகுதி

Wednesday, 9 April 2014

நினைவுகள் எழுத தூண்டுகிறது -1

2009ல் என்னுடைய கல்லூரி பயணம் முடிவுற்றது, ஆனால் அந்த நாட்களின் ஏக்கம் இன்றுவரை என்னுள் அடங்காமல் அவ்வபோது என்று அல்லாமல் பெரும்பான்மையான என் நினைவுகள் அதை பற்றியே தான் நினைத்து கொண்டு இருக்கின்றது. மனதை நெருடும் நேரத்தில் சற்று தனிமையாக என்னுடைய கல்லூரி நாட்களில் நடந்த இன்பகரமான நிகழ்வுகளை நினைத்தால் போதும், மனம் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று விடும்.

எப்பொழுதும் நண்பர்கள் படை சூழ இருந்துவிட்டு முதல் முறை 2010 ஜனவரி 18 கோவை மாநகர் நோக்கி சென்றேன் என்னுடைய முதல் பணிக்கு, அங்கு கற்றது தான் இன்றுவரை எனக்கு உதவி புரிந்து கொண்டு உள்ளது. கட்டிட பொறியாளராக இருப்பதில் கர்வமும் அங்கே தான் என்னுள் தோன்றியது. எவ்வளவு கடினம் என்றாலும் தொழில் நுட்பங்களை கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்து இருந்ததால், எந்தஒரு நிகழ்வும் என்னை பாதிக்கவில்லை. அப்பொழுது நான் நினைத்து கொள்வது இந்த ஆர்வம் ஏன் கல்லூரியில் இல்லாமல் போனது அப்படி இருந்து இருந்தால் இன்று நீ எப்படி இருந்து இருக்கலாம் என்று என்னையே கேட்டு கொண்ட நேரம் அது. ஆனால் அது தேவையற்றது என்று பின்னர் என்னை நானே தேற்றியும் கொள்வேன். காலத்திற்கு ஏற்ற ஞானம் வந்தால் போதும் என்ற கோட்பாட்டில்.

என்னுடைய முதல் மாதம் ஊதியம் 2250(14நாட்களுக்கு) வாங்கிய மணி நேரம் அதிகாலை 2.45, அன்றைய நாள் பணி காலை 8.30 தொடங்கி மறுநாள் அந்நேரத்தில் தான் நிறைவுற்றது. எனக்கு பெரும்பாலும் அங்கே நள்ளிரவு ,அதிகாலை தான் ஒவ்வொரு நாளின் பணி நிறைவு பெரும்,பெரும்பாலான கட்டிட பொறியாளர்கள் , தொழிலாளர்கள் வாழ்க்கை இவ்வாறு தான்.அதுவும் நான் ஊதியம் வாங்கிய அந்நாள் மகாசிவராத்திரி வேறு பின்னர் தான் அறிந்து கொண்டேன். அன்று முழுநாளும் கண் விழித்து இருந்தமையால் அதில் இருந்து இவ்வருட மகாசிவராத்திரி கூட கண் விழித்து இருப்பேன். அதில் ஓர் நிறைவு.




கல்லூரியில் இருந்தவரை அபிமான நாயகர்களின் படங்களை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடுவோம். 2010 பிப்ரவரி தல நடித்த அசல் வெளியீடு கண்டது நண்பர்களுடன் காண வேண்டும் என்று ஒருநாள் விடுப்பு எடுத்து சம்பளம் வேறு வந்துவிட்டது அதுவரை அப்பாவின் பணம் முதல்முறை என்னுடைய பணத்தில் எனக்கு நான் அன்பவித்து கொள்ள போகிறேன் அதுவே மிக பெரிய போதையை தந்தது. திருச்சியில் அசல் படம் கண்டேன் நண்பர்களோடு. அதுவே இறுதி ஆனாது இப்படி திரைபடத்திற்காக மெனக்கெட்டு ஓர் இடத்திற்கு செல்வது எங்கே இருக்கின்றேனோ அங்கேயே காண தொடங்கினேன். பெரும்பாலும் தனியாக அல்லது உடன் பணிபுரிவோர்களுடன்.

பணிபுரியும் இடத்தில் நற்பெயர் பெருகி கொண்டு இருந்தது , சில நேரத்தில் அதுவே தலை கனமாக மாற தொடங்கியது. ஆனால் எப்பொழுதும் எனக்குள் இருக்கும் தாழ்வுமனப்பான்மை அந்த தலை கனத்தை துவம்சம் செய்துவிட்டது.

கோவையில் நான் பணி புரிந்தது வெறும் நான்கு மாதங்களில் முழுமையாக பொறியியல் கல்லூரி கட்டி முடித்தோம் (2லட்சம் சதுரடிகள் 2 தளம் கொண்டவை). அங்கே எனக்கு தொழில் நுணுக்கங்கள் கற்று கொடுத்த என் முதல் ஆசான் கங்காதரன் சார் அவருடைய அனுபவங்களை அப்படியே எனக்கும் பதியவைத்தார். இன்றுவரையில் என்னுடைய தொழில் நிமித்தான சந்தேகங்களுக்கு அவரே ஆசான். ப்ராஜெக்ட் மேனேஜர் முத்து கிருஷ்ணன் , வேலையாட்கள் செய்த தவறுக்கு ( முந்தினநாள் கட்டியவைகளுக்கு மறுநாள் தண்ணீர் விட வேண்டும்) நான் பழியேற்று கொண்டேன், மிக காட்டமாக என்னை திட்டிவிட்டார் எம் .டி, அதை உடன் இருந்து கண்ட என்னுடைய பி.எம். சைட் ஆபீஸ் சென்றவுடன் கையில் வைத்து இருந்தவற்றை வீசி எறிந்துவிட்டு எனக்காக அவரிடம் வாதாடி உள்ளார்.அதை உடன் இருந்தவர்கள் பின்னர் என்னிடம் தெரிவித்த பொழுது அவர் மீது அளவில்லா மதிப்பு ஏற்பட்டது. மே 18 2010 பணியில் இருந்து விடை பெற்று வந்தேன்.வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகருக்கு

சட்டிஸ்கரில் புதிய பவர் பிளான்ட் சைட் ஆரம்பம் ஆக போகின்றது என்று வேறு கம்பெனியில் தேர்ந்து எடுக்கப்பட்டு சென்னையில் கலந்தாய்வு கூட்டம் எல்லாம் நடத்தி, நாளை அங்கு செல்ல வேண்டிய குழுவோடு ரயில் பயணம் என்று கூறிவிட்டனர். பெரும் ஆவலோடு எல்லோரும் காத்திருந்தோம் இதில் என்னுடைய கல்லூரி நண்பர்கள் இருவர் என்னோடு இனைந்து இருந்தனர். மறுநாள் பேரிடியாக வந்தது ஒரு செய்தி எனக்கு.......?


ஒரே நாளில் அங்கு தற்பொழுது நிலவரம் சரி இல்லை (மாவோயிஸ்ட் தாக்குதல் நடை பெற்று இருந்தது) என்று காத்திருக்க வைத்துவிட்டனர். எங்கள் குழுவில் பெரும்பாலானோர் அதே கம்பெனியில் பணிபுரிகின்றவர்கள் , என் இரு நண்பர்களோ அதுவரையில் வேலைக்கு செல்லாமல் இருந்தவர்கள்,நான் தான் இருந்த வேலையை விட்டுவிட்டு வந்தது பெரிய தவறு என்று முதல் முறை உணர்ந்தேன் மீண்டும் சேரலாம் அங்கேயே. ஆனால் வேறு இடத்தில் முயற்சி செய்துவிட்டு பின்னர் பார்த்துகொள்ளலாம் என்று சென்னையில் முயற்சி செய்ய தொடங்கினேன். ஒரு மாதம் கழித்து ஜூன் 21, 2010 உறவினர் கொடுத்த சிபாரிசில் (நேர்காணல் நடத்தினார்கள் இதுவரையில் நான் கலந்து கொண்ட நேர்காணலில் என்னை அதிகம் வாட்டியது அங்கே தான்) புது கம்பெனியில் சேர்ந்தேன்.

சென்னை என்று பெரிய நினைப்பு இல்லாமல் சென்னை என்ற சிறிய நினைப்புடனே தான் இங்கே வந்தேன் , அதே போல நேர்காணல் நடைபெற்ற அலுவலகம் தி.நகர், ஜி .என் செட்டி ரோடு. அலுவலகம் விஸ்தாரமாக சொகுசாக இருந்தது. நேர்காணலின் போதே என்னுடைய ஆவலை தெரிவித்து விட்டேன் ப்லான்னிங் எஞ்சினியர் தான் என்னுடைய விருப்பம் , அதற்க்கு உண்டான அட்வான்ஸ் கோர்ஸ் முடித்துள்ளேன் என்றெல்லாம் கூறினேன் ஆனால் அவர்கள் வழக்கம் போல அதற்க்கெல்லாம் அனுபவம் தேவை , முதலில் சைட்டில் கற்று கொண்டு பின்னர் நானே உங்களை ப்லான்னிங் டிவிஸியன்க்கு எடுத்து கொள்ளுகிறேன் என்று நேர்காணல் நடத்திய கம்பெனியின் சி.இ.ஒ கூறினார். சைட் ரெட் ஹில்ஸ் என்று கூறினார் அது எங்கயோ இங்க அருகில் தான் இருக்கும் என்று நினைத்து கொண்டே சென்றேன்.

ரெட் ஹில்ஸ், நான் சென்னை என்று எங்க ஊருக்கு வேணும்னா சொல்லிக்கலாம் என்பது போலவே அது இருந்தது கோயம்பேடில் பேருந்து ஏறினாள் ஒன்றரை மணிநேரம் சென்றது. பின்னர் ரெட் ஹில்ஸ் அடுத்து ஷேர் ஆட்டோ பயணம் சோழவரம் ரேஸ் ரோடு அருகில் தான் சைட். இவ்வளவையும் என்னுடைய லக்கேஜ் தூக்கி கொண்டு பயணித்தேன் ஷேர் ஆட்டோவில் இறங்கி சாலையில் இருந்து உள்ளே சைட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் அதிகாமாக நடை வேறு. மீண்டும் தனித்து விடப்பட்ட நினைப்பு புது இடம் புது சூழல். ஆனால் கல்லூரியில் பயின்ற என்னுடைய நெருங்கிய நண்பர்கள் சென்னையில் தான் இருந்தனர் ,கிண்டியில் அறை எடுத்து அவர்களின் நண்பர்களுடன். அது ஒன்று போதும் என்று நினைத்து கொண்டு பணியாற்றினேன். தொடக்கத்தில் தினமும் பணியிடத்திற்கும் கிண்டிக்கும் சென்று வந்து கொண்டு இருந்தேன் பயண நேரம் தினமும் நான்கு மணி நேரம் விழுங்கியது. பின்னர் சைட் அருகிலேயே (வன்னாஞ்சத்திரம்) பணிபுரிவோர்களுக்கு தங்க இடவசதி செய்து கொடுத்தனர்.

கட்டிட கலையில் பல பிரிவுகள் உண்டு சிலர் ஒன்றை மட்டும் பிடித்து அதில் அனுபவத்தை வளர்த்து கொள்வார்கள், இன்னும் பலர் எல்லாவற்றிலும் பங்கெடுத்து எதிலும் அனுபவமற்று இருப்பார்கள். சிலர் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவர். நான் என்னுடைய ஐந்து வருட அனுபவ முடிவில் ஏதோ ஒன்றை தேர்ந்து எடுத்து கொள்ளலாம், அதுவரையில் பெரும்பாலானவற்றை தொற்று விட வேண்டும்  வேண்டும் என்று பின்னர் முடிவு செய்தேன், ஏன் என்றால் கோவையில் வேலை கற்றதுக்கும் இங்கு சேர்ந்த இடத்தில் வெறும் 30 சதவிகிதம் தான் ஒற்றுமை மற்றவைகள் எனக்கு மீண்டும் புதியவைகளா இருந்தது (ஸ்டீல் ஸ்ட்ரக்சர்).

வேலை, நான் கோவையில் பணி புரிந்ததைவிட இலகுவாக இருந்தாலும் இங்கேயும் பல நாட்கள் நள்ளிரவு வரை இருக்க வேண்டும். முதல் முறை மொழிவாரியாக பிரிக்க பட்டேன் உள்நாட்டிலேயே, ஆம் நான் பணிபுரிந்த கம்பெனி ஆந்திர முதலாளி இந்தியா முழுக்க பல்வேறு தொழில்துறைகள் நடத்துபவர். என்னுடைய சைட் அருகே மிகபெரிய இடத்தை ரிலைன்ஸ் கம்பெனிக்கு வாடகைக்கு கொடுத்து உள்ளார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். அங்கே ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கு தான் முன்னுரிமை , என்றாலும் நாங்கள் சிலர் ஒன்றாக இருந்தோம் அதில் குறிப்பாக அங்கேயே 4 வருடங்களாக பணிபுரிந்து வந்த ஆனந்த் அங்கு உள்ள சூழலுக்கு ஏற்ப என்னை வழி நடத்தினார். பின்னர் கார்த்திகேயன் , சதீஷ் என்று என்னை தொடர்ந்து சேர்ந்தவர்கள் நாங்கள் ஒற்றுமையாக செயல்பட்டோம்.

இங்கே தான் முதல் முறையாக என்னுடைய ஊதியத்தில் சரி பாதியை வீட்டிற்கு கொடுக்க துவங்கினேன்.கோவையில் பணிபுரிந்த வரையில் வீட்டிற்கு கொடுத்ததே இல்லை, ஆக இதுவும் மறக்க இயலாத தருணம் எனக்கு.

அங்கு எனக்கு மேலதிகாரியாக பணி புரிந்த Ram Subramaniyan ராம சுப்பிரமணியன் , என்னுடைய பி.எம் ராஜசேகர் இவர்கள் எல்லாம் பக்க துணையாக உதவி புரிந்தனர் என்னுடைய வளர்ச்சிக்கு. மாதம் ஒருமுறை கூர்கான் தலைமை அலுவலகத்தில் இருந்து சி.இ.ஒ விசிட் வருவார் அப்பொழுதெல்லாம் நற்பெயர் வாங்கிக்கொண்டு. நன்றாக சென்று கொண்டு இருந்தது. கிண்டியில் நண்பர்கள் இருந்ததால் அடிக்கடி அவர்களுடன் நேரம் செலவிட்டு தேவை அற்ற விடுப்பு எடுத்து கொண்டு இருந்தேன். ஆனாலும் என்னுடைய பணியின் கருத்தின் காரணமாக எதையும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

பல உள்ளடிவேலைகளை எவ்வாறு சமாளிப்பது என்று கற்று கொண்டது இங்கே தான் , தெலுகு பேசும் நபர்களை எவ்வாறு கவர்வது என்று நினைத்து நான் எடுத்த ஆயுதம் தெலுகு சினிமா.அவர்களுக்கே தெரியாத அல்லது மறந்து இருப்பதை எடுத்து காட்டி கூறி,அவர்களை பற்றியும் தெரியும் என்பது போல காட்டி கொண்டு அவர்களையும் அரவணைத்து கோஷ்டி பூசல் இல்லாமல் பணி புரிந்தோம். அவ்வப்போது கம்பெனி பார்ட்டி என்று சைட்டிலேயே கொண்டாடுவர் அப்பொழுது எல்லாம் கிண்டிக்கு எஸ்கேப் ஆகிவிடுவேன்.

நான் பணி புரிந்த சைட்டை விரைவாக முடித்தமையாலும் , அருகே இதைவிட அதிக இட கொள்ளளவு கொண்ட வேலை இருந்த காரணத்தினால் மாற்றப்பட்டேன் அருகிலேயே. அங்கேயும் வழக்கம் போலவே நன்றாக சென்று கொண்டு இருந்தது. ஸ்டீல் ஸ்ட்ரக்சர் பற்றி ஓரளவுக்கு தெரிந்து கொண்டேன். உடன் பயின்ற நண்பர்களிடம் பெருமை பீற்றி கொண்டு இருந்தது வழக்கமே. 2010 தீபாவளிக்கு முதல் முறை போனஸ் (சேர்ந்து நான்கு மாதத்தில்) வாங்கி வீட்டில் எல்லோருக்கு ஆடைகள் வாங்கி தந்தது (அம்மாவிற்கு தரவில்லை வாங்க தெரியவில்லை) மறக்க முடியாதது.

தீபாவளிக்கு சென்று திரும்பிய பிறகு ஓமன் நாட்டில் வேலை என்று ஒரு நேர்காணலில் கலந்து கொண்டேன் சென்னையில், அதில் நானும் இன்னொருவரும் தேர்ச்சி பெற்று விட்டோம். வீட்டிற்கு எல்லாம் சந்தோசமாக சொல்லி விட்டேன். வேலை பார்க்கும் இடத்திலும் நண்பர்களிடம் சொல்லி விட்டேன். அந்த கணத்தில் தலையில் 20 கிலோ கனம் பிடித்தது போன்று இருந்தது. தொடர்ந்து 5 நாட்கள் வேலைக்கு செல்லாமால் இருந்துவிட்டு , சொன்னால் நிச்சயம் விட மாட்டார்கள் என்னுடைய உறவினரிடம் சொல்லி தடுத்து விடுவார்கள் என்று நினைத்து கொண்டே. வேலையை விட்டு வந்து விட்டேன். ஆனால் அங்கு என்னோடு பணி புரிந்த அனைவரும் இன்றும் என்னோடு தொடர்பில் உள்ளனர் என்னுடைய பி.எம் உள்பட (இவரிடம் பேசி கொஞ்ச நாள் ஆகிவிட்டது). இதுவெல்லாம் நடந்தது நவம்பர் 16,2010. இங்கயும் நான்கு மாதங்கள் தான். அப்பொழுதே உள்ளுக்குள் உறுத்தியது.

ஓமன் நாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் தங்களுடைய சான்றிதழ்களில் பல அதிகாரபூர்வ கையப்பங்கள் பெற வேண்டும் என்று கூறி அதற்க்கு உண்டான வேலைகளை தொடங்கினேன். நம் தலைமை செயலகம் சென்று கையப்பம் பெற்று , பின்னர் புரோக்கர் மூலம் டெல்லிக்கு அனுப்பி கையெப்பம் பெற்று வந்தது. இதற்க்கு எல்லாம் 20 நாட்களுக்கு மேல் ஆனது. இதற்கிடையே பெரும்பாலானோர் என்னை ஓமன் செல்லுவதை தடுக்கவே நினைத்தனர், உனக்கு முற்றிலும் ஒற்று வராது நீ நிச்சயம் திரும்பி விடுவாய் விட்டு விடு என்று பலவாறாக கூறினார்கள். அதை எதையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்தேன். அடுத்து மருத்துவ பரிசோதனை எடுத்து கொடுத்து விட்டால் ஒரு சில நாட்களில் பயணம் என்று வந்துவிட்டது.

-தொடரும்

(இந்த நேரத்தில் நான் என்ன முடிவு எடுத்து இருப்பேன் அல்லது என்ன முடிவு  எடுத்து  இருக்க வேண்டும் என்று கூறுங்கள்)


அடுத்த பகுதி