Friday 24 January 2014

கோலி சோடா - யதார்த்த கதாபாத்திரங்களின் கமெர்சியல் படம்


விஜய்மில்டன் ஒளிபதிவாளராக பல வெற்றி படங்களில் பணி புரிந்து இருந்தாலும் இயக்குனராக அவர் இயக்கிய அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது வியாபார ரீதியாக தோல்வி படமாகவே அமைந்தது ஆனாலும் நீண்ட வருடங்கள் கழித்து இப்பொழுது இயக்கிய படமே கோலி  சோடா அதுவும் அவரின் தயாரிப்பிலேயே துணிவுடன் பசங்க படத்தில் நடித்த பசங்களை கொண்டு எடுத்து உள்ளார்.

படத்தின் முன்னோட்டங்களில் கூட படத்தை பற்றிய சின்ன டீடேயிளிங்  கூறாமல் விட்டது தானோ என்னவோ படம் பார்க்கும் போது அதுத்த காட்சி என்னவாக இருக்கும் எந்தஒரு யூகமும் இல்லாமல் காண முடிந்தது. யதார்த்தமான பாத்திர அமைப்பில் நல்ல ஒரு கமெர்சியல் படைப்பாக வந்துள்ளது.

கதை என்று கூறி உங்களையும் ஒரு யூகத்துக்குள் சிக்க வைக்க எனக்கு விருப்பமில்லை. கோயம்பேடு மார்கெட்டில் அவர்களுக்கு  அடையாளம் என்று ஏதும் இல்லாத  மூட்டை தூக்கும் நான்கு இளம் பையன்கள் அவர்களுக்கான அடையாளங்களை தேடி எளிதாக பெற்று பின் எதிர்பாராமல் அதை பெரும் வலியுடன் இழந்து மீண்டும் பெறுவது தான் கதை. புரியாதவங்களுக்கு படம் பார்க்கும் போது நிச்சயம் புரிந்துவிடும்.


பசங்க படத்தில் நடித்த அந்த முக்கியமான நான்கு சிறுவர்கள் தற்பொழுது இந்த பாத்திரங்களுக்கு ஏற்ற வளர்ச்சியை பெற்று இருந்த காரணத்தினாலோ அவர்களையே நடிக்க வைத்துவிட்டனர். அந்த பையன்கள் மிக சிறப்பான நடிப்பை தந்து உள்ளனர் அதுவும் அவர்களுக்கென்று நிறைய மாஸ் சீன்கள் கூட இருக்கின்றது. கதைக்கு ஏற்றவாறு அவைகளும் கச்சிதமாக பொருந்தி போயுள்ளது. அதுவும் சண்டை காட்சிகளில் அனல் தெரிக்கின்றது பசங்களிடம். உணர்வுள்ள காட்சிகளில் அவர்கள் கலங்கும் போது நிச்சயம் நாமும் கலங்கி தான் போகின்றோம்.

ஆச்சியாக பருத்திவீரன் சுஜாதா நடித்துள்ளார் மிக யதார்த்தமான அளவான நடிப்பு , தன் பெண்ணையும் உடன் வேலை  செய்யும்  அந்த நன்கு பசங்களையும் வாஞ்சையுடன் நேசிக்கும் போது நல்ல பாத்திரமாய் நெஞ்சில் பதிந்து போவது சிறப்பு.

இமான் அண்ணாச்சி பசங்கள் உடன் தங்கி வேலை செய்து கொண்டு அவர்களுக்கு அவ்வப்போது உதவி கொண்டும், முதல் பாதியில் கானா பாலா பாடிய பாடல்கள் இவர் பாடுவது போல வந்து குதுகலிக்க வைத்தது அதுவும் பாடல்கள் கானா பாலாவின் குரலில் மிக அருமையாக இருந்தது. அண்ணாச்சி அனைத்து காட்சிகளிலும் நம்மை சிரிக்க வைத்தாலும் , சில நொடியே பாடலில் வரும் ஒரு காட்சியில் அவரின் சோகத்தை காட்டி உருக்கி விட்டனர்.

நாயுடுவாக வருபவர் தான் பசங்களுக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தருபவர் , மார்கெட்டின் சங்க தலைவராக செல்வாக்குள்ள மனிதராக கச்சிதமாக கதையில் பொருந்தி போகி காட்சிகளுக்கு ஏற்ப மிக சிறப்பாக நடித்து உள்ளார் அவரின் மச்சானாக வரும் மயில் கூட லோக்கல் ரவுடி எப்படி இருப்பானோ அதை அப்படியே கண் முன் நிறுத்துகிறார். நாயுடுவின் மனைவிகளாக ஆம் அவருக்கு இரண்டு மனைவிகள் வருபவர்களும் கணவனின் கம்பீரத்தை தாங்களும் ஏற்று அவாறே நடந்து கொண்டனர், அதிலும் மீனாள் சில காட்சிகளில் தூள் சொர்னாக்காவை மிஞ்ச பார்த்துள்ளார்.

ஆச்சியின் மகளாக வருபவர் அழகு, பசங்களுக்காக உருகுவதும் அந்த வயதுக்கு ஏற்ற காதலில் விழும் போது நம்மையும் விழுங்கிவிட்டார் மென்மையாக. பசங்களின் முதல் தோழியாக வருபவர் அழகில்லை என்று படத்தில் அவளே கூறினாலும் காணும் நமக்கு நிச்சயம் அந்த வலி தெரியும் அதுவும் அதற்காக அந்த பெண் கூறும் பதில் "என்னால தப்பு நடந்து இருந்தா நான் கவலை படனும் , யார் செஞ்ச தப்போ " என்று சர்ச்சில் கூறும் பொழுது செவுட்டடியாய் இருந்தது. பசங்களுக்காக அந்த தோழி முயற்சி எடுக்கும் பொழுது நம்மையும் அறியாமல் அவளையும் மதிக்க  தொடங்கிவிடுவோம்.

படத்திலேயே மிக சிறந்த காட்சிகள் என்றால் அவர்கள் பெற்ற அடையாளத்தை எப்படி இழக்கின்றனர் என்று இடைவேளைக்கு முன் வரும் போது , அங்கே தான் படம் கமெர்சியல் என்பதையும் மீறி எல்லோர் ஊர்களிலும் எளியோர்கள் வளியோர்களால் படும் வேதனைகளை மிக யதார்த்தமாக அழுத்தமாக பதிவு செய்து தனி இடம் பிடிக்கிறது. அதன் பின் அவர்கள் அதை திரும்ப பெற கமெர்சியல் சினிமா என்ற மாயயைக்குள் சிக்கினாலும் நம்மை பரிசோதிக்காமல் இனிதே சென்றவகையில் நல்ல படமாகிவிட்டது.

வசனம் மிக பெரிய பலம் படத்திற்கு பாண்டியராஜ் பட்டைய கிளப்பிவிட்டார், ஒவ்வொரு வசனமும் யதார்த்த வாழ்வையும் அபத்தங்களையும் சோகங்களையும் பிரதிபலித்தது. அதுவும் ஆச்சியிடம் பசங்கள் தாங்கள் ஏன் இப்படி இருக்கின்றோம் என்று கூறும் இடம் மிக அருமையாக இருந்தது. டாஸ்மாக் சில்மிஷங்கள் என்று பல அபத்தங்களை வசனம் மூலம் போகிற போக்கில் தெளித்துவிட்டு போகிறார். பசங்களுக்கு என்று வரும் மாஸ் காட்சிகளில் அவர்களுக்கு ஏற்றவாறு எளிமையாக கையாண்டு நம்மையும் ஏற்றுக்கொள்ள வைத்துவிடும் இடத்தில் வெற்றி பெற்று விட்டார் பாண்டியராஜ்  வசனகர்த்தாவாக.

ஒளிப்பதிவு ஷூட்டிங் சென்று படம் பிடித்தது போல் அல்லாமல் கதை களங்களில் கேமரா பதுக்கி வைத்துவிட்டு எடுத்தது போல இருந்த இடத்திலும் இந்த படம்  கமெர்சியல் படமா என்ற சந்தேகத்தை மீண்டும் எழுப்பியது. பாடல்கள் என்று தனியாக காட்சியை விட்டு இல்லாமல் கதையோடு உணர்ந்து  காட்சிகளோடு இனைந்து உறுத்தாமல் இருந்தது. மீண்டும் கூறுகிறேன் கானா பாலா பாடல் அருமை. பவர் ஸ்டார் ஒரு பாடலில் பவராகவே &  நடன இயக்குனராக சாம் அன்டேர்சன் உடன்  வந்து சிரிக்கவைக்கிறார்.

படம் முடிந்து கோயம்பேடு மார்கெட்டை  பார்க்க  வேண்டும் என்ற ஆவல் என்னால் கட்டுபடுத்த முடியவில்லை.எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று முழு நிறைவுடன் வந்தேன் . நிச்சயம் இது தவிர்க்க வேண்டிய சினிமா இல்லை ஒரு தடவை ஆச்சும் எல்லோரும் பார்க்க வேண்டிய நல்ல சினிமா கோலி சோடா , யதார்த்த பாத்திர படைப்பில் கமெர்சியல் கலவை.

பின் குறிப்பு :
1. மொத்தம் இரண்டு பேர் மட்டும் தான் இன்று பார்த்தோம் அதுவும் நான் சென்று டிக்கெட் எடுக்கும் போது இன்னொருவர் வந்தால் தான் என்று வழக்கம் போல கூறிவிட காத்திருந்து ஒருவர் வந்தார் அவரிடம் ஆர்வமுடன் அண்ணே என்ன படம் என்று பதட்டத்தில் கேட்டு (ஜில்லா வீரம் வேற ஓடிட்டு இருந்தது ) கோலி சோடா என்று கூறியவுடன் திருப்தியுடன் சென்றோம். அவருக்கு இது போல 600 நபர்கள் கொள்ளளவு கொண்ட திரை அரங்கில் வெறும் இரண்டு நபர்கள் மட்டும் காண்பது முதல் முறை போல . நமக்கு மூடர் கூடம் , ஓநாயும் ஆட்டுக்குட்டியும் , என்றென்றும் புன்னகை என்று பழகிடுச்சு. 

Wednesday 8 January 2014

வீரம் - ஜில்லா---------- அஜித் - விஜய் ------- தல- தளபதி

தல அஜித் - தளபதி விஜய் இவர்களின் படங்கள் வெளியாகுது என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது ரசிகர்களிடம். இதுவரையில் இவர்களின் படங்கள் ஒன்றாக வெளிவந்த படங்களை  பற்றி ஒரு சிறிய பார்வையே மற்றும் சில வருடங்களுக்கு பிறகு தற்பொழுது வெளியாக போகும்  இருவரின் வீரம்-ஜில்லா படங்களின் முன்னோட்டமும் சேர்ந்ததே இப்பதிவு. 

வான்மதி - கோயம்புத்தூர் மாப்பிள்ளை (1996)


இப்படங்கள் வெளிவந்த சமயத்தில் விஜய் அவர்கள் நல்ல அறிமுகத்தோடு இருந்து இருப்பார். ஆனால் அஜித் அறிமுகம் கிடைத்து விடாதா என்றே முயற்சி செய்து கொண்டு இருந்து இருப்பார். இப்படங்களின் வெற்றி தோல்வி என்பதை விட வான்மதி படத்தில் வரும் "பிள்ளையார்பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா" என்ற  பாடல் இன்றும் விநாயகர் கோவில்களில் ஒலிப்பதை மறுக்க முடியாது. அதே போல கோ.மாவில் விஜய்-கவுண்டர் காமெடி நன்கு எடுபட்டது தெரியும். இன்றும் கூட ரசிக்க முடியும்.இப்படங்களுக்கு பிறகு சில நாட்களிலேயே வெளி வந்த பூவே உனக்காக மிக பெரிய வெற்றி பெற்று விஜய் என்ற நடிகரை பட்டி தொட்டி எங்கும் அறியவைத்தது. பின் இவ்வருடத்திலேயே நடுபகுதியில் வெளிவந்த ஆசை படமும் அஜித்திற்கு மிக பெரிய வெற்றியையும் அதுவரையில் அரவிந்த் சாமி போல மாப்பிள்ளை பார்த்த நம் தமிழ்நாடு அஜித் போல மாப்பிள்ளை வேணும் என்று சொல்ல தொடங்கியது.ஆக இருவரும் 1996ல் வெற்றி பெற்று நாயகர்களாக வர தொடங்கிவிட்டனர்.

நிலவே வா - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்(1998)


ரொமாண்டிக் ஹீரோ என்ற அந்தஸ்த்துடன் விஜய் வளம் வந்து கொண்டு இருந்த சமயம். பூவே உனக்காக , காதலுக்கு மரியாதை, ஒன்ஸ் மோர் என்று ஹிட்களை கொடுத்து நல்ல அடித்தளமிட்டு கொண்டு இருந்தவருக்கு நிலவே வா தோல்வி படமாகவே அமைந்தாது ஆனால் பாடல்கள் இன்றும் கேட்டால் நன்றாக இருக்கும்.ஆனால் அஜித் ஆசை படத்திற்கு பிறகு தேசிய விருது பெற்ற காதல் கோட்டை  நல்ல வெற்றி படமாக அமைந்தாலும் தனித்துவமாக  சொல்லிக் கொள்வது போல் வெற்றி படங்கள் ஏதும் இல்லாமல் அவரேஜ் படங்களாக  தந்து கொண்டு இருந்தார். அப்படி கிடைக்கின்ற படங்களில் எல்லாம் நடித்தாலும் விக்ரமன் அவர்களின் நட்பில் கெஸ்ட் ரோல் (அமெரிக்க மாப்பிள்ளையாக) நடித்த படமே உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் , படம் பெரிய வெற்றி தான் ஆனால் என்ன பயன் அஜித்திற்கு. காதல் மன்னன் வெளி வந்து நல்ல யூத் அப்ரோச் இருந்தபொழுது பின் வந்த இப்படம் கொஞ்சம் வருத்தமாக தான் இருந்து இருக்கும்.(அஜித் அவர்களை பாடல்கள் மூலமாக ரசிக்க தொடங்கிய காலம் இவ்வருடம் 1998 தான் காதல் மன்னன் பாடல்கள் பட்டைய கிளப்பியது எஸ்.பி.பி குரலில் ஆனால் விஜய் நல்ல காதல் அம்சம் உள்ள வெற்றி படங்களாக தொடர்ந்து ஹிட் கொடுத்து கொண்டே இருந்தார்)


தீனா-ப்ரெண்ட்ஸ் (2001)


ரஜினி-கமல் அடுத்து  அஜித்-விஜய் என்று பேச்சு துவங்கிய நேரம், காதல் படங்களின் நாயகனாகவே வெற்றி தந்தும் அதையே தொடர்ந்து கொண்டு  இருந்தார் விஜய் அப்படி காதலும் , நட்பும் என்று செண்டிமெண்டோடு நகைச்சுவை  பெரிதும் இடம் பெற்று வெளிவந்த ப்ரெண்ட்ஸ் மிக பெரிய வெற்றி பெற்றது அதிலும் வடிவேலு காமெடி பெரும் பங்காற்றியது. அஜித் அவர்கள் அமர்க்களம் படத்தின் வெற்றி மூலமாக ஆக்ஸன் படங்களில் அடிவைக்க தொடங்கினாலும் தீனா படம் தான் அவரை மாஸ் ஹீரோவாக கொண்டு சென்றது காதல் மன்னன் அஜித் தல அஜித் ஆனார். அஜித் படத்தில் அணிந்து வரும் தேள் பொருத்திய செயின் சாலையில் செல்லும் பெரும்பாலான இளையோரின் கழுத்தில் காண முடிந்தது. அதகளம் புரிந்து கொண்டு இருப்போர்கள் அஜித் ரசிகர்கள் என்று கூறுவதை மறுக்க முடியாது அப்பொழுது.

வில்லன் -பகவதி (2002)


அஜித் அவர்கள்  வித்தியாச முயற்சி , காதல்  , கமெர்சியல் என்று அனைத்து விதமான படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் பெரும்பாலும் இளையோர்கள் தான் குடும்ப ரசிகர்கள் நடுநிலை ரசிகர்களை அவரால் கவரவே முடியவில்லை. அவரின் வெற்றி படங்களும் ரசிகர்களை நிறைவு கொள்வதாகவே அமைந்தது. ரெட் ,ராஜா என்ற தோல்வி படங்கள் கொடுத்து இருந்த சமயத்தில் நல்ல ஒரு திருப்புமுனையாக அமைந்தது வில்லன். இவரின் நடிப்பும் பேசப்பட்டது எல்லோரிடமும் கொண்டு சேர்த்தது.ஆனால்  பகவதி திரைப்படமோ விஜய் அவர்களுக்கு தோல்வி படமாக அமைந்து நல்ல கமெர்சியல் ஹீரோ அந்தஸ்த்து பெற முயற்சி செய்து கொண்டு இருந்தவருக்கு முட்டுக்கட்டையாகவே அமைந்தது.

திருமலை -ஆஞ்சநேயா (2003)


அஜித்-விஜய் என்ற பேச்சு பயங்கரமாக இருந்த சமயம் பல கைகலப்புகள் எல்லாம் வழக்கமாக இருந்தது. அஜித் நல்ல கமெர்சியல் நாயகான இருந்து வல்லரசு என்ற வெற்றி படம் எடுத்த இயக்குனர் அவரின் ஆஞ்சநேயா படம் பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் வெளிவந்து மிக பெரிய தோல்வி படமாக அமைந்தது. ஆனால் விஜய் அதுவரை தேடி கொண்டு இருந்த கமெர்சியல் ரூட் பக்காவாக திருமலையில் செட் ஆனது வெற்றி படமாக அமைந்தது.இப்படங்களுக்கு பின் விஜய் ஏற்றமே எல்லோர் மத்தியிலும் குழந்தைகள் , பெண்கள் என்று ஆனால் அஜித்திற்கு ரசிகர்கள் குறையவும் இல்லை இளையோர்களின் மத்தியில் பெருகி கொண்டு தான் இருந்தனர் தோல்வி படங்களாக வெளிவந்து கொண்டு இருந்தாலும்.

பரமசிவன் - ஆதி (2006)


அதுவரையில் சில வருடங்களாக படங்களில் (ரெட், ஜி ,அட்டகாசம்,ஜனா ) உடல் உபாதைகளால் உட்கொள்ளும்  மருந்துகளால் உடற்பெருகி காட்சி அளித்து கொண்டு இருந்த அஜித் அப்பொழுது நடித்து கொண்டு  இருந்த வரலாறு  பின் நடிக்க இருந்த நான் கடவுள் படத்திற்காகவும் உடல் இளைத்து இருந்த சமயம் பாலாவின்  தயாரிப்பில்  நடித்த படமே பரமசிவன் தோல்வி முகமாய் இருந்தவருக்கு இப்படம் அவரை இளமையாக கண்டவிதத்தில் & நீண்ட நாட்களுக்கு(தண்டுவட ஆபரேஷன் ) பிறகு பைக் சாகசம் கண்ட ரசிகர்களுக்கு  அவரேஜ் படமாக தான் போனதே  தவிர  நல்ல ஒரு வெற்றி படமாக அமையவில்லை. விஜய் அவர்களோ கில்லி எனும் மெகா வெற்றியில்  தொடங்கி மதுர , திருப்பாச்சி ,சிவகாசி என்று  மிக பெரிய இடத்தில் இருந்தவரை தன் அப்பாவின் தயாரிப்பில் திருமலை என்ற திருப்புமுனை படத்தின் இயக்கத்தில் வெளிவந்த ஆதி படுதோல்வி அடைந்தது.

ஆழ்வார் -போக்கிரி (2007)


வெற்றிக்காக நான்கு வருடங்கள் காத்திருந்த அஜித் மற்றும் அவர் ரசிகர்களுக்கு வராலறு என்ற  மிக பெரிய வெற்றியை  கொடுத்து நான் கடவுள் என்ற படத்தில் இருந்து அஜித் விலகி பின் புதுமுக இயக்குனரின் படைப்பில் (ப்ளீஸ் திட்டிடாதீங்க) வெளிவந்த ஆழ்வார் மெகா  தோல்வியை  சந்தித்தது. போக்கிரி படமோ விஜய்க்கு இன்னுமொரு கில்லி வெற்றி போல அமைந்தது. அஜித்-விஜய் என்ற நேரடி  போட்டியில் இராண்டாம் முறை திருமலைக்கு பிறகு விஜய் அருமையான வெற்றி பெற்றார்.


அதை  தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாக போகின்றது. போக்கிரி பிறகு விஜய் இறங்குமுகவே தொடர்ந்தார் வேட்டைக்காரன் எனும் அவரேஜ் படம் வரை, விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு பலமாக ஒலித்தது நஷ்ட ஈடு கேட்டு பேட்டி தர தொடங்கி விஜய்க்கு சோதனை  காலமாகவே இருந்தது காவலன் வெளியாகும்  வரையில் பின்னரும் அவரேஜ் படங்களாக தொடர்ந்து நண்பன் படத்தில் நிமிர்ந்து துப்பாக்கியில் மீண்டும் அதே உயரம் சென்றவரை தலைவா கீழே தள்ளிவிட்டது.  எப்பொழுதும் சூப்பர் குட் பிலிம்ஸ் படம் என்றாலே விஜய்க்கு பெரிய வெற்றி   தான்  அதே  நம்பிக்கையில்    தான்  அவர்களும் நாமும் இருக்கின்றோம். படத்தின் முன்னோட்டங்களை காணும் பொழுது எந்த ஒரு  வித்தியாசமும்  தோன்றவில்லை அக்மார்க் விஜய் படம் தான் போல என்ன முந்தைய பொங்கலுக்கு ஆதி போலா இல்லை போக்கிரி போலாகுமா என்று தான் பார்க்க வேண்டும். 

ஆனால் அஜித் பில்லா வெற்றிக்கு பிறகு எத்தனை தோல்வி  படங்கள் தந்தாலும் கிங் ஒப் ஒபெநிங்  என்று அழைக்கபட்டார். தோல்விகள் தொடர்ந்தாலும் எந்த விநியோகஸ்தர்களும் நஷ்ட ஈடு கேட்டு பேட்டி தரவில்லை.மங்காத்தாவின் வெற்றி அவரின் மாஸ் அந்தஸ்த்தை ஆணித்தரமாக உறுதி செய்தது    விஜய் அரசியலில் காலுன்றுவது போல அணிலாக செயல் பட தொடங்கிய நேரம் அஜித்  ரசிகர் மன்றங்களை களைத்த பின் பெற்றதே மங்காத்தா  வெற்றி பின்   தொடர்ந்த பில்லா 2 தோல்வி என்றாலும் முதல் வார  கலெக்சன் ஒபெநிங் அதற்கு நிகர் இல்லை வரிசலுகை அற்று. வெளிவந்த  ஆரம்பம் கூட நல்ல வசூல் தான் அந்த நிலையோடு வெளியாக போகும் வீரம் அவரேஜ் ஆக இருந்தால் கூட தப்பித்து கொள்ளும்.

ஜில்லா- விஜய்க்கு அவசியம்  தேவையான முக்கிய வெற்றி 

வீரம் - தொடர் வெற்றி என்ற ரீதியில் தேவையான வெற்றி 

பின் குறிப்பு :

1. ப்ரெண்ட்ஸ் - தீனா படங்கள் முதல் நான் பார்த்ததை கொண்டே குறிப்பிட்டு உள்ளேன். அதற்கு முன் உபயம் விக்கி.

2. யாருக்கும் சாதகமா எழுதலை அப்படி உண்மை அல்லாதவற்றை எழுதி இருந்தால் குறிப்பிடுங்கள் நீக்கி விடுகிறேன்.