Showing posts with label செல்வராகவன். Show all posts
Showing posts with label செல்வராகவன். Show all posts

Friday, 22 November 2013

இரண்டாம் உலகம் - தமிழ் சினிமாவின் புது உலகம்

முன்குறிப்பு :

இதுவரை நான் எழுதுவதை (கொஞ்ச நாளா தான்) தொடர்ந்து படித்து வர நண்பர்களுக்கு நல்லாவே தெரிஞ்சி இருக்கும் , இயக்குனர் செல்வராகவனின் விசிறி நான்  என்பது ஆனால் இப்பொழுது அவரின் இரண்டாம் உலகம் என்ற திரைப்படத்தை பற்றி கூறும் பொழுது இதை விமர்சனம் என்று நினைக்காமல் முழுக்க முழுக்க என் பார்வையில் இரண்டாம் உலகம்  திரைப்படத்தின்  என்னுடைய கருத்து என்றே கூறிவிடுகிறேன்.

இரண்டாம் உலகம் மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பை வைத்து தான் காண சென்றேன்  ஆனால் நேற்று இரவு முதல் இன்று மலை வரை விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருந்தது , அதிலும் எதிர் விமர்சனங்கள் செல்வராகவனை முற்றிலும் புறம் தள்ளுவது போலவும்   மாறாக ஆதரவாக வருபவையோ செல்வாவின் மாஸ்டர் பீஸ் அடுத்த கட்டம் சென்று விட்டார் என்று சரி தான் இதுவும் இன்னொரு புதுபேட்டை , ஆயிரத்தில் ஒருவன் கேஸ் தான் போல  என்று ஒரு நிலைக்கு வந்து எப்பொழுதும் போல இயக்குனரின் மேல்  நம்பிக்கை குறையாமல் சென்றேன். முழுநிறைவோடும் மனம் முழுக்க ஒரு சின்ன கனத்தோடும் தான் வந்தேன் எங்கே இந்த படமும் கேட்பார் அற்று காலம் கடந்து புரிந்து கொள்ளப்படுமோ என்ற சந்தேகம் தான் இப்பொழுதைய தமிழ் சினிமாவில் அந்த சந்தேகம் அடிக்கடி நல்ல திரைப்படங்களை பார்த்தால் உடனடியாக வருகின்றது, மற்றபடி நம் சினிமாவிற்கு முற்றிலும் மாறுபட்ட அடுத்த நகர்வுக்கான அழுத்தமான தொடக்கமே இரண்டாம் உலகம்.


படத்தின் கதையை கூறினால் நிச்சயம் சுவாரசியம் குறைந்து போகும் அதிலும் மனித உணர்வுகளை தாண்டி படம் மேகிங்கில் மிரட்டுவதால் கதையை சொல்லுவது சரியாக இருக்காது. ஒரே வரி கதை ஆனால் அதை அற்புதமான திரைக்கதை  பின்னலால் ஆசாத்திய கதை ஆக்கிவிட்டார் இயக்குனர். உண்மையான காதல் எந்த கண்டமும் தாண்டி கூட வெற்றி பெரும். இது தான் கதை. மைய கதாபாத்திரங்கள் மொத்தமே 5 (அ) 6 நபர்கள் தான், அதிலும் பெரும்பாலான காட்சிகள் மௌன மொழியாகவே தன் படைப்பின் மேல் உள்ள நம்பிக்கையில் வசனமற்று  காட்சி மொழியாகவே படைத்து இருப்பது நிச்சயம் வரவேற்க வேண்டும், திரைப்படம் காட்சி மொழி என்பதை எல்லோருக்கும் உணர்த்துவதற்கு.

ஆர்யா, நிச்சயம் நான் கடவுள் படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுபட்டு திறமையை வெளிக்காட்டியது , ஒரு காட்சியில் கூட அவரின் முந்தைய எந்த சாயலும் வெளிபடாதது வியப்பை தான் தந்தது. முதலில் அனுஷ்காவிடம் முடியாது என்று சொல்லிவிட்டு பின் காதலுக்காக ஏங்குவதும் உருகுவதும் கிளாஸ் ஆக்டிங். மாவீரனாக உருவெடுக்கும் போது புகுந்து விளையாடி இருக்கிறார் , எகத்தாளமான பேச்சு அனுஷ்காவிடம் மட்டும் அடங்கி போவது என்றும் பின் எழுச்சி பெறுவதும் என்று ஆர்யாவின் மைல்கல்லாய் தான் இருக்கபோகின்றது இரண்டாம் உலகம். அதுவும் இடைவேளைக்கு முன் வரும் காட்சிகளும் நாயுடன் சேர்ந்து நடிக்கும் பொழுதும் கலங்க வைத்து விடுகிறார் பின் தொடர்ந்து இடைவேளை பிறகு தொடரும் காட்சிகளிலும் தேடுதலை துவங்கும் போது அப்ளாஸ் அள்ளினார் திரை அரங்கில். மிருகத்தோடு சண்டையிட்டு பின் வெற்றி பெரும் காட்சி வெறி திமிர் தெரிந்தது ஆர்யாவிடம், அதே போல இறுதிகட்ட காட்சிகளில் காதலை உணர்வதும் ஒருவர் பின் காதல் சேர்ந்த நிறைவு கொள்ளுவதும் என்று இருவேறு பாத்திரத்தில் நன்றாக முழுமை பெற்று இருப்பார்.

அனுஷ்கா இதுவரை தமிழ் சினிமாவில் இவரை பயன்படுத்திய இயக்குனர்கள் பார்த்தால் வெட்கி தலை குனிய தான் வேண்டும். முழுகதையையும் தன்னை சுற்றி வர கூடிய மைய பாத்திரம் ஆனால் இவரோ அனாசியமாக நடித்து தள்ளிவிட்டார். ஆர்யாவிடம் காதலை சொல்ல தடுமாறுவதும் பின் வருந்துவதும் என்று சுடிதாரில் பல பேர் மனதுகளை கொள்ளை கொள்ள போகிறார். ஆர்யாவிடம் முரண்டு பிடித்து சண்டை போடுவதாகட்டும் பின் தேடி செல்லுவதாகட்டும் அனுஷ்கா என்ற நடிகைக்கு கிடைத்த அற்புத படைப்பு இரண்டாம் உலகம். சண்டை காட்சிகளில் எத்தனை நாட்கள் தான் பெண்களில் விஜயசாந்தி என்றே கூறி கொண்டு இருப்பது , இதில் பாருங்கள் பின் நான் சொல்லுவது புரியும்.அனுஷ்காவின் தோழியாக வருபவரும் தன் தேர்வை சரி செய்து இருப்பார் அதே போல ஆர்யாவின் நண்பனாக வருபவர் (சுட்ட கதை படத்துல நடிச்சவரா ???) முதல்பாதியில் வரும் காட்சிகளும் பின்  கனிமொழியே பாடலிலும் கிச்சு கிச்சு மூட்டுவார்.அதே போல சிறிது நேரம் மட்டும் வரும் ஆர்யாவின் அப்பா ஒரு சின்ன தாக்கத்தை தருவது நிச்சயம் அதுவும் அவரின் அறிமுகம் கொஞ்சம் சிறு அதிர்ச்சி மற்றும் உணர்வை தூண்டும் காட்சியாக தான் எனக்குப்பட்டது.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி , நீண்ட நாட்களுக்கு பிறகு நம் திரைப்படங்களில் அற்புதமான ஒளிப்பதிவு இதில் , மழையோடு அனுஷ்கா விளையாடும் பொழுது இவரின் காமெராவும் விளையாடியது போல கொள்ளை அழகு அதுவும் கண்ணாடியில் மழை நீர் சொட்ட சொட்ட அதன் பின் இருக்கும் அனுஷ்காவை அப்படியே காட்டும் பொழுது கவிதை போல இருந்தது. இடைவேளைக்கு முன் வரும் இரவு நேர காட்சிகளில் அப்படியே துள்ளியமான அந்நேரம் கிடைத்தது என்று படம் முழுக்க தன் பங்கை மிக திறமையாக கையாண்டு உள்ளார் ராம்ஜி. வி.எப்.க்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம்  குறிப்பிட்ட பட்ஜெட்டில் மிக அற்புதமாகவே இதுவரை வந்ததை காட்டிலும் சிறந்ததாகவே வந்துள்ளது அதற்க்கும் இப்படமே முன்னோடி தான்.


பாடல்கள் மிகபெரிய மைனஸ் அதுவும் செல்வாவின் படங்களில் இது மட்டுமே விதிவிலக்கு , ஏதோ காட்சிபடுத்துதலில் அதை கொஞ்சம் ரசிக்க வைத்துவிட்டார் இயக்குனர். ஹாரிஸ் போட்ட பின்னணி இசை கூட வரவில்லை படத்தில் எந்த இடத்திலும். பின்னணி இசையில் அனிருத் இன்னும் எதிர்பார்த்தது, ஆனால் பெரும்பாலான இடங்களில் மௌனமாகவே இருந்தது தேவை உணர்ந்து இவரிடம் பெற்றது வெளிப்பட்டது. ஆர்யா முதல் முதலில் அனுஷ்காவை நினைத்து காதலில் தவிக்கும் பொழுது வரும் பின்னணி இசை, கோவா செல்லும் பொழுது தொடரும் இசை , இடைவேளை முன்னும் பின்னும் தொடர்ந்து அதிரடியின் போதும் மிரட்டி தான் உள்ளது அனிருத்தின் இசை.

இயக்குனர் செல்வராகவன் , இப்படி பட்ட கதையை நம் மக்களை நம்பி யோசித்து அதை எடுத்தமைக்கே இவரை பாராட்ட வேண்டும் அதிலும் தன்னால் முடிந்த அளவு வெற்றியும் பெற்று இருக்கிறார். நிச்சயம் இரண்டாம் உலகம் தவிற்க முடியாத படமாக தான் ஆகும். அதுவும் இக்கதை ஒரு நாவலாக வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும், அத்தனை அம்சமும் இக்கதையில் இருக்கின்றது திரைப்படத்தை விட இன்னும் சிறப்பாக வரும் நாவலாக வந்தால். ஆயிரத்தில் ஒருவன் படத்துல பேசுன தமிழ் புரியலைன்னு சொன்னதுக்காக இதுல எல்லாரையும் சுத்த நடைமுறை  தமிழ்ல பேசவுட்டு பதில் சொல்லிட்டார் போல , அப்புறம் ஹாலிவுட் படம் மட்டும் தான் நம்ம ஆளுங்க வரவேற்பாங்க போல என்று பெரும்பாலான துணை நடிகர்கள் வெளிநாட்டினரே போட்டு எடுத்து இருக்கார். இதனாலும் குறை கூற ஆரம்பித்து விடுவார்கள். அதையும் விடுத்து இதில் லாஜிக் பார்த்து குறை சொன்னால் நிச்சயம் தனிப்பட்ட இயக்குனரின் மேல் ஆனா பார்வையே. இது அவர் உருவாக்கிய உலகம் அவரை நாம் தொடர்ந்தாலே புரிந்துவிடும்.

சில இயக்குனரின் படங்களை டெம்ப்ளேட் காட்சிகளோடு பார்ப்போம் , சில நாயகர்களின் படங்களை அவரின் வருகை எப்போ எப்போ என்றே காண்போம் ஆனால் சில படங்களை நாம் சிறு வயதில் கேட்ட கதை போல என்ன என்ன என்று அடுத்து அடுத்து இயக்குனரை பின் தொடர வேண்டும் அப்பொழுது மட்டுமே நிச்சயம் முழுமை பெற முடியும் அவ்வகையான திரைப்படமே இரண்டாம் உலகம். பெருமைமிகு படைப்பு என்பதில் வியப்பேதும் இல்லை ஆனாலும் தற்போதைய நிலவரப்படி நல்ல சினிமாக்களை எல்லாம் கைவிடுவது  போல விடுத்து பின்னர் மட்டுமே விட்டதை நினைத்து வருத்தம் மட்டும் கொள்வோமோ என்ற நினைப்பு தான் உறுத்துகிறது.

இரண்டாம் உலகம் - தமிழ் சினிமாவின் புது உலகம்



பின்குறிப்பு :

1.முதல் நாள் என்றாலும் இதுவரை இங்கே பெரிய நடிகர்களின் படங்களை தவிர எதற்கும் கூட்டம் இருக்காது ஆனால் இன்று நான் கண்ட காட்சி ஹவுஸ் புல் , செல்வாவிற்கு இங்கே வரை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது.

2. படத்தில் இடம் பெரும் சில வசனங்களை  மேற்கோள் காட்டி குறிப்பிட வேண்டும் என்றே தோன்றியது ஆனால் அவைகள் மிக முக்கியமான காட்சிகள்  என்பதால் தவிர்த்துவிட்டேன் அதை பற்றி பின்னர் இல்லை பின்னுட்டங்களில் பார்ப்போம்.அதே போல சொல்ல வேண்டியது இன்னும் நிறையவே உள்ளது அதையும் இன்னும் ரெண்டு மூன்று தடவை பார்க்க பார்க்க தெரியவரும் விரிவாக அப்பொழுது பார்ப்போம்.

3.என்ன இருந்தாலும் எனக்கு இதை விட ஆயிரத்தில் ஒருவன் மிக பிடித்து இருந்தது அது ஏன் என்றால் ஆயிரத்தில் ஒருவன் மிக பிடித்தவருக்கு மட்டுமே தெரியும்.ஆனா அது பிடிகாதவுங்களுக்கு கூட இது பிடிக்கும்.

Monday, 11 November 2013

முன்னோட்டம் என் பார்வையில் இரண்டாம் உலகம்

திரைப்படத்தின் முன்னோட்டம் என்று கூறுவதைவிட வரபோகும் படத்தின் என் கருத்து என்று கூறிவிடுகிறேன், பரிசோதனை முயற்சி என்பதை முயற்சியாக மேற்கொள்ளாமல் அதை ஒரு கலையாகவே மேற்கொண்டு அதை வெற்றி தோல்வி என்று அடிப்படை ஏதும் இல்லாமல் ஒரு விவாத தலைப்பாக ஏற்படுத்தும் இயக்குனர் செல்வராகவன், அடுத்து நமக்கு  தரகூடிய தலைப்பு  இரண்டாம் உலகம்.


இரண்டாம் உலகம் இப்படத்திற்காக செல்வராகவன் குறைந்தது மூன்று வருடங்களுக்கு மேல் மெனகெட்டு சிற்பியாக இப்படத்தை செதுக்கியது அனைவரும் அறிந்ததே. ஆயிரத்தில் ஒருவன் என்று தற்காலத்தில் தமிழ் சினிமாவில் பாண்டஸி , நம் வரலாற்றில் அதன் வழியாக  கொட்டி கிடக்கும் கற்பனைகளுக்கு உயிர் ஊட்டிய  முயற்சியை  தொடங்கிவைத்த பெருமை இவரையே சாரும்,அது  அந்த படத்தின் வெற்றி தோல்வி என்று பேச்சை தவிர்த்து பார்த்தால் புரியும். அவ்வளவு  எளிதாக ஆயிரத்தில் ஒருவன் படத்தை ஒதுக்கி தற்கால தமிழ் சினிமாவை பற்றி பேசவும் விவாதித்திடவும்  முடியாது. ஒரு நேர்காணலில் செல்வராகவனிடம் நீங்கள் எடுத்த படத்தில் எந்த படத்தை ஏன் எடுத்தோம் என்று நினைத்தீர்கள் ??? என்ற கேள்விக்கு எந்த ஒரு தயக்கமும் இன்றி அடுத்த நொடியில் செல்வா கூறியது ஆயிரத்தில் ஒருவன் அருகில் அப்பொழுது இருந்த அவர் மனைவி கீதாஞ்சலி கூட அதிர்ச்சியில் சற்று தடுமாறுவது நன்றாக தெரியும்.

 அந்த நேர்காணலை காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் (8.33ல் அக்கேள்வி கேட்பார்கள் )



இப்படி கூறியதால்  செல்வராகவன் அவர் மனதில் அப்படத்தால் எந்தளவுக்கு சொல்ல முடியாத உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார் என்று புரிந்துகொள்ள முடியும்.ஆனால் அப்படம் என்னை போன்ற பலருக்கு செல்வராகவன் என்ற இயக்குனரின் மேல் மிக பெரிய நம்பிக்கை ஏற்படுத்தியது என்பதையும் நிச்சயம் குறிப்பிட்டு தான் ஆக வேண்டும். அதனால் தானோ என்னவோ இல்லை ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பங்கு கொண்ட அனைவரையும் சிறப்பிக்க வேண்டும் என்றோ மிக தைரியமாக இரண்டாம் உலகம்  படத்தின் முதல் முன்னோட்டம் கொண்டு இப்பொழுது வரும் முன்னோடங்களில் கூட,

 FROM THE MAKERS OF "ஆயிரத்தில் ஒருவன்"


 என்று கிரெடிட் தந்து,  ஏன் படத்தில் கூட  நிச்சயம் வரும் போல,  என்னை போன்ற அப்படத்தை கொண்டாடியவர்களுக்கும் அதில் தங்கள் உழைப்பை கொட்டியவருக்கும் நன்றி தெரிவித்தது போல செய்துவிட்டார் செல்வராகவன்.

எல்லோரும் வழக்கமாக செல்வாவின் படங்களை எதிர்வினை ஆற்றும் பொழுது இவருக்கு காதல் களம் கொண்ட கதைகள் நன்கு  வருகின்றது அதை விடுத்து ஏன் வேறு களங்களில் முயற்சி செய்கிறார் என்று கூறுவார்கள் அதில் ஒரு துளி கூட உடன்பாடு கிடையாது எனக்கு எப்பொழுதும்  , அப்படி அவர் தொடங்கிவைத்த புதுப்பேட்டை  , ஆயிரத்தில் ஒருவன் என்று எவராலும் அதை போன்ற படைப்புகளை விஞ்சவோ  தொடரவோ  முடியவில்லை, ஆரண்ய கண்டம் மட்டும் விதிவிலக்கு.இதோ அவரே தொடர்ந்து விட்டார் எல்லோரும் சொல்லுவது போல காதல் களம் அதில் இரண்டு உலகம் என்று அவர் நிகழ்த்த போகும் மாயயை பெரும் எதிர்பார்ப்பில் எகிறிகிடக்கின்றது.

படத்தின் முன்னோட்டத்தை காண கிளிக்கவும்


ஆர்யா நிச்சயம் இதுவரை நாம் கண்டதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஆர்யாவை காணலாம் அது உடல் மொழி கொண்டு நடிப்பில் வரை புதுமையை காண நிறைய வாய்ப்புள்ளது. அனுஷ்கா என்ற நடிகையை தமிழில் எவரும் பயன்படுத்தியது இல்லை, செல்வாவின் படத்தில் நாயகிக்கு எப்பொழுதுமே முக்கியத்துவம் தான் அதை சொல்லியா  தெரிவிக்க வேண்டும் ஆக இதில் நிச்சயம் அனுஷ்காவின் அடுத்த பரிணாமத்தையும் காணலாம்.

இவைகளை தாண்டி முன்னோட்டத்தை காணும் பொழுது வழக்கமான செல்வாவின் பளிச் என்பது நிறையவே வெளிபடுகின்றது உதாரணம் அனுஷ்கா காலை தூக்கி ஆர்யா மேல் போடுவது, நாயகன் நாயகியை விட  கொஞ்சம்  மென்மையாகவும் வெளிக்காட்டுவது, காதலில் உருகுவதும் வருந்துவதும் என்று செல்வாவின் இந்த வருகை அழுத்தமாக பதியவேண்டும் என்றே நினைத்து கொள்ளுகிறேன்.

செல்வராகவன் என்ற இயக்குனரின் மற்றும் இயக்குனரை நம்பி இதை தயாரிக்கும் பி.வி.பியும் மற்றும் படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் மிக சிறந்த வெற்றியை பெற்று தர வேண்டும் இரண்டாம் உலகம்.

நவம்பர் 22 முதல் "இரண்டாம் உலகம்"


Friday, 4 October 2013

முதல் முறை என்னை ரசிக்கவும் வியக்கவும் வைத்த இயக்குனர்

நம் தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் அவரவர் காலங்களில் பெரும் புகழும் பெயர்களையும் எடுத்து பலருக்கு முன் உதாரணமாக இருந்து உள்ளனர் அவரவர் காலங்களில் உள்ள இளைஞர்களுக்கு  திரைப்பட காதலர்களுக்கு ஆதர்ச இயக்குனர்களாக இருந்து பலரின் நெஞ்சங்களில் இடம் பெற்று உள்ளனர். அப்படி என் பள்ளியில் நான் 11வது  (2003ல்) படிக்கும் பொழுது என்னை முதல் முறை இயக்குனராக அவரின் முதல் படைப்பே  அத்தனை ஒரு ஆனந்தம் கொண்டாட்டம் பரவசம் ஏற்படுத்தியது. நானும் முதல் முறை ஒரு இயக்குனரை என் விருப்பமாக தேர்ந்து எடுத்து அவரின் அடுத்த அடுத்த படங்களை எதிர்நோக்கினேன் என் கால  நண்பர்களை போல , என்னை போல பலருக்கும் அவர் தான் இக்காலத்தில் ஆதர்ச இயக்குனராக இருப்பார். அவரின் முதல் படம் தொடங்கி இன்று வரை அவற்றின் அனைத்து படங்களையும் ஒரு நாயகனிற்கு தரும் வரவேற்பை போல முதல் நாளே கண்டு அனுபவித்து கொண்டாடி  கொண்டு இருக்கின்றேன். அவர் பெயர் இயக்குனர் செல்வராகவன்.

துள்ளுவதோ இளமை வந்தபொழுது அதை பற்றிய பேச்சு "ஏ" ரகமாகவே வந்து கொண்டு இருந்தது . அப்பொழுது 10ஆம் வகுப்பு  தொடங்க இருந்த  நேரம், எப்படியும் படத்தை பார்த்து விட வேண்டும் என்று ஒரு ஆவல் என்னதான் இருக்கும் என்று, அதை போலவே அந்த படம் கண்ட பொழுது நன்றாகவே உள்வாங்க முடிந்தது !!! அப்பொழுதே செல்வராகவன் அவர் தான் இயக்கினார் ஆனா அவுங்க அப்பா பேர போட்டுடாங்க என்று எல்லாம் பேசி கொண்டு இருந்தோம். தமிழகத்தில் எல்லோரின் பார்வையும் இருவேறு கருத்துகளோடு பெரும் வெற்றி பெற்ற படம் துள்ளுவதோ இளமை அனைவரும் அறிந்ததே.


இதன் பிறகு ஒரு வருடம் கழித்து வெளிவந்த காதல் கொண்டேன் 2003ல் படம் வருவதற்கு முன்னே தினசரிகளில் விளம்பரம் கண்டு இந்த படத்திற்கு முதல் நாள் நிச்சயம் போய்விட வேண்டும் என்று தீர்மானித்து அதைப்போலவே சென்றோம் நண்பர்கள் எல்லோரும். படம் தொடங்கியது முதல் அப்படி ஒரு பரவசம் காட்சிக்கு காட்சி புதுமையாக தெரிந்தது நடிப்பு வசனம் பாத்திர அமைப்பு என்று எல்லோரையும் வியக்கவைத்தது. காதல் கொண்டேன் படத்திற்கு இன்னும் ஞாபகம் நன்றாக உள்ளது படம் முடிந்தவுடம் செல்வராகவன் பெயருக்கு திரை அரங்கில் அப்படி ஒரு அப்ளாஸ் கிடைத்தது அன்று திரை அரங்கில் அவருக்கு  கிடைத்த வரவேற்பும் என்னுள் அப்படம் ஏற்படுத்திய தாக்கமும் அவரை என்னோடு இணைத்தது. அன்று துவங்கியது என்று  அவரின் அடுத்த படைப்பின் தாகம் இன்று வரை  அவ்வாறே  இருந்து கொண்டுதான் இருக்கின்றது.


அடுத்து அவரின் வெளியீடு 7ஜி ரெயின்போ காலனி ,நாங்கள்  பாடல்கள் பட வெளியீடுக்கு முன்னே கேட்க துவங்கிய பொழுது அது , தினமும் பள்ளிக்கு எதிரே உள்ள டி கடை நண்பர்களின் வீட்டில் 7ஜி பாட்டை கேட்டு கேட்டு ஆர்வமாக இருந்தோம் , முதல் நாள் பெரும் எதிர்பார்ப்புடன் சென்று படத்தை கொண்டாடினோம் , இடைவேளை  சோனியாவிடம் பீலிங்க்ஸ் ஆக ரவி பேசும் காட்சி  அதிர்ந்தது அத்தனை ஆராவரம் , கண் பேசும் வார்த்தை பாடல்கள் என்னை அறியாமல் கண் கலங்கியது. கனா காலும் காலங்கள் பாட்டு  முடிந்து அவளின் வீட்டுக்கு பைப் வழியாக சென்று திரும்ப இறங்கும் பொழுது ஒரு வசனம் "இவ்ளோ நடந்தும் உன் பின்னாடி வரேன் நா ஏன் புரிஞ்சிக்கடி " அப்படி ஒரு பூரிப்பு அதை கேட்டவுடன்.வேலை கிடைத்து விட்டது என்று அப்பாவிடம் சொல்லும் அதை தொடர்ந்து வரும் காட்சிகளும் எங்களை நாங்கள் நினைத்து கலங்கினோம். இறுதியில் நினைத்து நினைத்து பாடலில் மாயான  அமைதி கலங்கிய கண்களோடு காண்போருக்கு இறுதியில் படம் முடிந்து செல்வராகவன் பெயர் வரும் பொழுது முன்னை விட இப்பொழுது இடி முழக்கம் போல் சப்தம் அவருக்கே கேட்டு இருக்கும். இப்பொழுது இன்னும் என்னுள் இறங்கிவிட்டார் செல்வராகவன் மீண்டும் துவங்கியது அடுத்த படைப்பின்  தாகம்.


ஆனால் இம்முறை நீண்ட நாட்கள் காக்க வைத்துவிட்டார் இரண்டு வருடம் 2006ல் பட வெளியீடுக்கு முன்னே கல்லுரி விடுதியில் இப்படத்தை பற்றி காரசாரமான விவாதங்கள் ஓடும் , ஒவ்வொருவர் விதவிதமாக கூற செல்வாவின் கூட இருந்தது போல என் கருத்துக்களை கூறிக்கொண்டு இருப்பேன்.முதல்  செமஸ்டர் இறுதி தேர்வு (Fundamentals of computer science) அன்று படமும் வெளியீடு  காலையில்  எழுந்தவுடன் தேர்வா படமா என்று நண்பர்களுடன் ஆலோசித்து கொண்டு இருந்தோம் ஒருத்தனும் துணைக்கு வரவில்லை பரிட்ஷை முடிச்சிட்டு போலாம்னு எல்லோரும் சொல்ல , வேறு வழியிலாமல் தேர்விற்கு சென்று (அந்த பேப்பர்  அரியர் ) வெறிக்க வெறிக்க அமர்ந்து இருந்து 45நிமிடங்கள் ஆனவுடன் வெளிவந்து  வர மதியம் சென்றோம் , எனக்கோ செல்வா படம் 2 வருடங்கள் கழித்து என்ற மிக பெரிய எதிர்பார்ப்பு எகிறி கிடந்தது . படம் தொடங்கியது முதல் உள்ளுக்குள் பேரானந்தம் என்னடா இப்படி எடுத்து இருக்கார் என்று சொல்லிட்டே மிரண்டு போனோம்.சாதாரண கதையை தன்னுடைய அசாதாரமான திரைக்கதையாலும் இயக்கத்திலும் நிருபித்து இருப்பார். படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் இயக்குனரின் அடையாளங்களை பதித்து இருப்பது தெரியும். தன்னால் காதல் கதை களத்தை பின்பலமாக வைத்தே தான் வெற்றி பெற முடியும் என்று நினைத்தவர்களுக்கு ஒரு இயக்குனராய் சரியான முறையில் இப்படத்தின் வாயிலாக பதில் தந்திருப்பார். ஒரு கிரியெட்டராக நிச்சயம் இந்த படம் அவருக்கு மிக பெரிய வெற்றி. இப்படத்தை பற்றி விரிவாக வேறுஒரு பதிவில் சொல்லுகிறேன். படம் முடிந்து எல்லோரும் மிரண்டு போனோம் அன்றே இரவு காட்சியும் பார்த்தோம். கல்லூரி விடுதியில் இப்படத்தில் வரும் முதல் காட்சி போல நடித்து பார்ப்போம் நண்பர்கள் மீண்டும் மீண்டும் நடிக்க சொல்லுவார்கள். அந்தளவுக்கு  இந்த படம் எங்களை கவர்ந்தது என்னை மிக நுட்பமாக உள்வாங்கி கொண்டது. இப்பொழுது செல்வாவின் அடுத்த படைப்பின் தாகம் வெறி தனமாக மாறிவிட்டது.


ஆனால் மிகுந்த ஏமாற்றம் தெலுகுவில் படம் இயக்கி அதை காண வாய்ப்பிலாமல் , இரண்டு வருடங்கள் கழித்து தமிழில் யாரடி நீ மோகினி என்று அவரின் உதவியாளர் இயக்கி வெளிவந்தது. அந்த படம் மிக பிடித்தாலும் இதை ஏன் இங்கே இயக்காமல் விட்டார் என்ற ஆதங்கம் இருந்தது ? பின் அந்த தெலுகு படத்தை எப்படியோ கண்டு பார்த்து மனுஷன் எங்கயும் விட மாட்டான்  போல  என்று சிலாகித்தேன்.


செல்வாவின் இயக்கத்தில் படம் தமிழில் வந்து சுத்தமாக 4 ஆண்டுகள் ஆகி இருந்தது 2010 ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றிய முன் செய்திகள் எல்லாம் பிரமிக்க வைத்தது , எதிர்பார்ப்பு வார்த்தைகளில் சொல்ல இயலவில்லை ஒட்டு மொத்த திரை உலகமும் இப்படத்தை எதிர்பார்த்தது.பொங்கல் அன்று படம் வெளியீடு இம்முறை கல்லூரி முடிந்து வேலைக்கு சென்று கொண்டு இருக்கின்றேன் நண்பர்கள் எல்லாம் புதிது. ஒருவரை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றேன்.ஆயிரத்தில் ஒருவன் யார் என்ன கூறினாலும் எனக்கு இப்படம் பெரும் நம்பிக்கையை செல்வா மேல் வைத்தது. இவரால் என்னவொரு படமும் செய்ய முடியும் இவரை ஒரு வட்டத்தினுள் வைக்க முடியாது. தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்தில் கொண்டு செல்ல முயற்சிக்கும் இவரை என்னால் தவிர்க்கவே முடியவில்லை. கொண்டாடவே செய்கிறேன்.


இதை தொடர்ந்து மயக்கம் என்ன 2011ல்  அப்படியே வேறு தளத்தில் மீண்டும் செல்வா உணரவைத்தார். இந்த படமும் முதல் நாள் இம்முறை வேலை  சென்னையில் வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ் 15 நண்பர்கள் புக் செய்து சென்றோம். படம் முடிந்து அனைவரும் சரி இல்லை என்று கூற ஒருவன் மட்டும் என்னா படம் போங்கடா ரசனை கெட்டவிங்கலா என்று வாதிட்டேன். ஆனால் அந்த 15 நபர்களில் இன்று 10 இல்லை 11 நபர்கள் மயக்கம் என்ன படம் பார்க்க பார்க்க செம்மையா இருக்குடா என்று கூறுகிறார்கள். அது தான் செல்வராகவன் புதுபேட்டை , ஆயிரத்தில் ஒருவன் , மயக்கம் என்ன இந்த படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து பிடித்து போனவர்கள் ஏராளம்.இம்மூன்றும் வேறு வேறு தளங்கள் என்பதில் தான் செல்வா என்ற இயக்குனர் பளிச்சிடுகிறார்.


இம்முறை அவரின் அடுத்த படம் இதோ இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது இரண்டாம் உலகம் என்று அவர் நடத்த போகும் மாயயை காண  பெரும் ஆவலோடு உள்ளேன். சிலிர்க்கின்றது படத்தின் முன்னோட்டத்தை பார்த்தால். செல்வாவின் படத்திற்கு என்று என்னை போல எத்தனையோ நபர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். அவரின் படைப்பின் மேல் உள்ள காதல் எத்தனை பேரை திரையுலகத்திற்கு அழைத்து கொண்டு வர போகின்றதோ. இன்னும் இருபது வருடங்கள் கழித்து பார்த்தால் அப்பொழுது வரும் இயக்குனர்கள் கூறுவார்கள் புதுபேட்டை பார்த்து சினிமாக்கு வந்தேன் சார் என்று. அதில் இருக்கும் அவரின் மிக பெரிய வெற்றி.


செல்வராகவன் தமிழ் சினிமாவின் மாற்று திசை.



(இதுபோல நான் சமகாலத்தில்  பார்த்து முதல் படைப்பில் இருந்து கொண்டாடிய இயக்குனர்களை பற்றி வரும் பதிவுகளில் கூறுகிறேன்.)