Showing posts with label விருப்பமான இயக்குனர்கள். Show all posts
Showing posts with label விருப்பமான இயக்குனர்கள். Show all posts

Thursday, 10 October 2013

இவரின் படங்களில் கற்றேன் பல

கல்லூரி வாழ்க்கை ஓவ்வொரு மாணவர்களுக்கும் அது போல் ஒரு ஆனந்தமான சூழல் வாழ்வில் கிடைப்பது மிகவும் அரிது, தன்னுடைய முழுமையான தேடலை தொடங்கும் காலம் அதில் பலர் வெற்றி தோல்வி என்று அடைந்தாலும் எல்லோரும் நிச்சயம் பெறுவது வாழ்க்கைக்கான மிக பெரிய பாடம் அனுபவம் , அந்த அனுபவ  சூழலே பின் வரும்  மிக பெரிய இடையூறுகளை எளிதாக கையாள கற்று தந்து இருக்கும். அந்த அனுபவம் உன்னாலும் உனக்கு கிடைக்கும் , உன் நண்பனாலும் உனக்கு கிடைக்கும் ,  உன் வாசிப்பாலும் உனக்கு  கிடைக்கும் , நண்பர்களோடு நீ செல்லும் திரைபடங்களாலும் கிடைக்கும். இவைகளின் அனுபவங்கள் எப்பொழுதும் கிடைக்குமே என்று நீங்கள் நினைத்தால் , எங்கே கிடைத்தாலும் இந்த சுழல் போல கிடைக்காது. இன்னும் நன்றாக சொல்ல போனால் என்னுடைய தற்பொழுதைய நிலை கல்லூரி முடித்து ஐந்து வருடங்கள் ஆகின்றது. இன்றும் நான் என்னுடைய பல கடினமான சுழலில் அந்த அனுபவத்தை எடுத்து கொண்டே செல்லுகிறேன்  என்பது மறுக்க முடியாத உண்மை.

அதுபோல் அப்பொழுது நண்பர்களோடு அன்று பல திரைப்படங்கள் சென்று இருந்தாலும் எங்கள் எல்லோருக்கும் அன்றும்  இன்றும் என்றும் நிறைய கற்று கொடுத்த ஒரே திரைப்படம் இது மட்டும் தான் , எங்களின் சில தவறுகளை , நாங்கள் மறந்ததை எங்களுக்கு நினைவூட்டியது அதிகம் இந்த திரைப்படமே. இப்படம் மூலமாகவே எனக்கு கிடைத்த இன்னுமொரு மிக பெரிய பொக்கிஷம் அந்த இயக்குனர்.

இயக்குனர் ராம் "கற்றது தமிழ்" இத்திரைப்படம் தான் என்றும் கற்க நிறைய உதவி புரிகின்றது.


கற்றது தமிழ் படம் பார்த்து முடித்தவுடன் குறைந்தது மூன்று நாட்கள் நிம்மதியாக எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. எல்லாவகையிலும் இப்படமே நினைவில் வந்து மிகவும் ஒரு ரண வேதனை ஆக்கியது. நண்பர்களுடன் இப்படத்தை பற்றி கலந்து ஆலோசிக்கும் போதும் பலவகையான விஷயங்களை பற்றிய பேச்சுகள் நீளும். எங்களுக்கு தெரியாதவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையை இது தந்தது.

பொறியியல் படித்து கொண்டு இருந்த எங்களுக்கு எங்கள் நண்பர்கள் என் கல்லூரியில் ஏன் இன்றும் பலதரப்பட்ட மக்களிடம் சிவில் இன்ஜினியரிங் என்று கூறினால் கொஞ்சம் ஏற்ற இறக்கமாக தான் காணுவார்கள். அதை ஒரு பிரிவு என்று ஏற்று கொள்ள கூட தயங்குவது நான் அதிகம் கண்டது (ஆனா உலக அளவில் அதற்கான மதிப்பு இன்று கண் கூட உணர்கிறேன்) . அதே போன்று தமிழ் மொழி படித்தவர்களின் வலிகளை காணும் போது எங்களையும் அறியாமல் பயந்தோம்.


உலகமயமாக்குதல் என்றால் என்ன என்பதின் உண்மை அர்த்தத்தை இந்த படத்தின் மூலமே கற்றோம்.

 ஒவ்வொரு மக்களும் தன் நாட்டின் ஏற்ற இறக்க பொருளாதார நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று உரைத்தது.

நாட்டின் உணமையான வளர்ச்சி என்பது எதில் உள்ளது என்பதை எடுத்து கூறியது.

எந்த படிப்பு  படித்தாலும் எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்து உரைத்தது.

தனிப்பட்ட சந்தோசம் மற்றவரின் இடையூறுகளை எப்படி பெற்று தரும் என்று விளக்கியது.

இவைகள் எல்லோரின் வாழ்விற்கும் மிக அத்தியாவசிய தேவைகள். திரைப்படமாக குறைகளை தாண்டியும் இது பாதுகாக்க வேண்டிய முக்கியமான திரைப்படம்.

தற்பொழுது வெளிவந்த தங்கமீன்கள் அன்பை, உணர்ச்சிகளை, உணர்வுகளை, குடும்ப உறவுகளை, கல்வி முறையை, குழந்தை வளர்ப்பு முறையை, இன்றைய ஆசிரியர்களின் நிலையை, சமூகத்தின் விளம்பர யுக்தியை, என்று சகலமும் நாம்  காட்சியாக காணும் பொழுது இது திரைப்படம் என்பதை மறந்து நம்மில் நடந்ததை நினைவு படுத்துவதே இதன் சிறப்பு.


அடுத்து அவரின் வெளியீடாக வரபோகும் தரமணி இப்பொழுதே எனக்குள் மிகபெரிய ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரையில் எதை குறை யாரால் அதிகம்  அவதி என்று கூறினாரோ. இப்பொழுது அவர்களின் காதலை கதையை கூறபோகிறார். அவர்களின் பக்கம் இருக்க போகும் நியாயத்தை எடுத்து கூறுவார் என்று நினைக்கின்றேன்.என்னை பொருத்தவரை அவரின் படத்தில் எதை தெரிந்து கொள்ள போகின்றேன் என்ற ஆர்வம் தான் இருக்கும். அதே போல தரமணி படத்திலும் எதை கற்க போகின்றேன் என்று எதிர்பார்த்துகொண்டே இருப்பேன்.

இயக்குனரின் ராமின் திரைப்படத்தை ஒரு முறை நீங்கள் கண்டால் இருபது சிறுகதைகள் வாசித்த உணர்வும் அல்லது ஒரு நாவல் வாசித்தது போலவும் நிச்சயம் உணர முடியும்.அவ்வளவு நேர்த்தியாக பல காட்சிகள் ஏன் முடிகிறது என்ற ஆதங்கம் தரும். இவர் படங்களில் வரும் காட்சி படுத்தும் இடங்கள் கூட பல கதைகள் பேசும். ஒரு பழமொழி சொல்லுவாங்க அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று அதுபோல ராம் அவர்களின் படத்தின் தரம் இவர் தேர்வு செய்யும் இடங்களிலேயே தெரிந்து விடும் போல. என்னுடைய ஆசையும் , சிறந்த உணர்வுபூர்வமான , அத்தியாவசிய அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய  நாவல் ஒன்றை ராம் அவர்கள் திரைப்படமாக நமக்கு தர வேண்டும். அதையும் கற்க வேண்டும்.


திரைப்படம் என்பது திரைபாடமாக இருக்கும்பச்சத்தில் அது எத்தனை காலம் ஆனாலும்  அந்த படைப்பிற்கு அழிவு இல்லை. பிரபாகரன்,ஆனந்தி , தமிழ் வாத்தியார், செல்லம்மாள்,கல்யாணி,எவிட்டா மிஸ் இவர்களுக்கும் இவர்களின் கதைகளுக்கும் (கற்றது தமிழ் & தங்க மீன்கள்)  என்றும் அழிவே இல்லை.இன்னும் பல லட்சம் நபர்கள் இவர்களை கற்க வேண்டும்.

என்னை கவர்ந்த இயக்குனர் ராமிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள். இன்னும் பல சிறந்த படைப்புகளை உங்களிடம் இருந்து எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

Friday, 4 October 2013

முதல் முறை என்னை ரசிக்கவும் வியக்கவும் வைத்த இயக்குனர்

நம் தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் அவரவர் காலங்களில் பெரும் புகழும் பெயர்களையும் எடுத்து பலருக்கு முன் உதாரணமாக இருந்து உள்ளனர் அவரவர் காலங்களில் உள்ள இளைஞர்களுக்கு  திரைப்பட காதலர்களுக்கு ஆதர்ச இயக்குனர்களாக இருந்து பலரின் நெஞ்சங்களில் இடம் பெற்று உள்ளனர். அப்படி என் பள்ளியில் நான் 11வது  (2003ல்) படிக்கும் பொழுது என்னை முதல் முறை இயக்குனராக அவரின் முதல் படைப்பே  அத்தனை ஒரு ஆனந்தம் கொண்டாட்டம் பரவசம் ஏற்படுத்தியது. நானும் முதல் முறை ஒரு இயக்குனரை என் விருப்பமாக தேர்ந்து எடுத்து அவரின் அடுத்த அடுத்த படங்களை எதிர்நோக்கினேன் என் கால  நண்பர்களை போல , என்னை போல பலருக்கும் அவர் தான் இக்காலத்தில் ஆதர்ச இயக்குனராக இருப்பார். அவரின் முதல் படம் தொடங்கி இன்று வரை அவற்றின் அனைத்து படங்களையும் ஒரு நாயகனிற்கு தரும் வரவேற்பை போல முதல் நாளே கண்டு அனுபவித்து கொண்டாடி  கொண்டு இருக்கின்றேன். அவர் பெயர் இயக்குனர் செல்வராகவன்.

துள்ளுவதோ இளமை வந்தபொழுது அதை பற்றிய பேச்சு "ஏ" ரகமாகவே வந்து கொண்டு இருந்தது . அப்பொழுது 10ஆம் வகுப்பு  தொடங்க இருந்த  நேரம், எப்படியும் படத்தை பார்த்து விட வேண்டும் என்று ஒரு ஆவல் என்னதான் இருக்கும் என்று, அதை போலவே அந்த படம் கண்ட பொழுது நன்றாகவே உள்வாங்க முடிந்தது !!! அப்பொழுதே செல்வராகவன் அவர் தான் இயக்கினார் ஆனா அவுங்க அப்பா பேர போட்டுடாங்க என்று எல்லாம் பேசி கொண்டு இருந்தோம். தமிழகத்தில் எல்லோரின் பார்வையும் இருவேறு கருத்துகளோடு பெரும் வெற்றி பெற்ற படம் துள்ளுவதோ இளமை அனைவரும் அறிந்ததே.


இதன் பிறகு ஒரு வருடம் கழித்து வெளிவந்த காதல் கொண்டேன் 2003ல் படம் வருவதற்கு முன்னே தினசரிகளில் விளம்பரம் கண்டு இந்த படத்திற்கு முதல் நாள் நிச்சயம் போய்விட வேண்டும் என்று தீர்மானித்து அதைப்போலவே சென்றோம் நண்பர்கள் எல்லோரும். படம் தொடங்கியது முதல் அப்படி ஒரு பரவசம் காட்சிக்கு காட்சி புதுமையாக தெரிந்தது நடிப்பு வசனம் பாத்திர அமைப்பு என்று எல்லோரையும் வியக்கவைத்தது. காதல் கொண்டேன் படத்திற்கு இன்னும் ஞாபகம் நன்றாக உள்ளது படம் முடிந்தவுடம் செல்வராகவன் பெயருக்கு திரை அரங்கில் அப்படி ஒரு அப்ளாஸ் கிடைத்தது அன்று திரை அரங்கில் அவருக்கு  கிடைத்த வரவேற்பும் என்னுள் அப்படம் ஏற்படுத்திய தாக்கமும் அவரை என்னோடு இணைத்தது. அன்று துவங்கியது என்று  அவரின் அடுத்த படைப்பின் தாகம் இன்று வரை  அவ்வாறே  இருந்து கொண்டுதான் இருக்கின்றது.


அடுத்து அவரின் வெளியீடு 7ஜி ரெயின்போ காலனி ,நாங்கள்  பாடல்கள் பட வெளியீடுக்கு முன்னே கேட்க துவங்கிய பொழுது அது , தினமும் பள்ளிக்கு எதிரே உள்ள டி கடை நண்பர்களின் வீட்டில் 7ஜி பாட்டை கேட்டு கேட்டு ஆர்வமாக இருந்தோம் , முதல் நாள் பெரும் எதிர்பார்ப்புடன் சென்று படத்தை கொண்டாடினோம் , இடைவேளை  சோனியாவிடம் பீலிங்க்ஸ் ஆக ரவி பேசும் காட்சி  அதிர்ந்தது அத்தனை ஆராவரம் , கண் பேசும் வார்த்தை பாடல்கள் என்னை அறியாமல் கண் கலங்கியது. கனா காலும் காலங்கள் பாட்டு  முடிந்து அவளின் வீட்டுக்கு பைப் வழியாக சென்று திரும்ப இறங்கும் பொழுது ஒரு வசனம் "இவ்ளோ நடந்தும் உன் பின்னாடி வரேன் நா ஏன் புரிஞ்சிக்கடி " அப்படி ஒரு பூரிப்பு அதை கேட்டவுடன்.வேலை கிடைத்து விட்டது என்று அப்பாவிடம் சொல்லும் அதை தொடர்ந்து வரும் காட்சிகளும் எங்களை நாங்கள் நினைத்து கலங்கினோம். இறுதியில் நினைத்து நினைத்து பாடலில் மாயான  அமைதி கலங்கிய கண்களோடு காண்போருக்கு இறுதியில் படம் முடிந்து செல்வராகவன் பெயர் வரும் பொழுது முன்னை விட இப்பொழுது இடி முழக்கம் போல் சப்தம் அவருக்கே கேட்டு இருக்கும். இப்பொழுது இன்னும் என்னுள் இறங்கிவிட்டார் செல்வராகவன் மீண்டும் துவங்கியது அடுத்த படைப்பின்  தாகம்.


ஆனால் இம்முறை நீண்ட நாட்கள் காக்க வைத்துவிட்டார் இரண்டு வருடம் 2006ல் பட வெளியீடுக்கு முன்னே கல்லுரி விடுதியில் இப்படத்தை பற்றி காரசாரமான விவாதங்கள் ஓடும் , ஒவ்வொருவர் விதவிதமாக கூற செல்வாவின் கூட இருந்தது போல என் கருத்துக்களை கூறிக்கொண்டு இருப்பேன்.முதல்  செமஸ்டர் இறுதி தேர்வு (Fundamentals of computer science) அன்று படமும் வெளியீடு  காலையில்  எழுந்தவுடன் தேர்வா படமா என்று நண்பர்களுடன் ஆலோசித்து கொண்டு இருந்தோம் ஒருத்தனும் துணைக்கு வரவில்லை பரிட்ஷை முடிச்சிட்டு போலாம்னு எல்லோரும் சொல்ல , வேறு வழியிலாமல் தேர்விற்கு சென்று (அந்த பேப்பர்  அரியர் ) வெறிக்க வெறிக்க அமர்ந்து இருந்து 45நிமிடங்கள் ஆனவுடன் வெளிவந்து  வர மதியம் சென்றோம் , எனக்கோ செல்வா படம் 2 வருடங்கள் கழித்து என்ற மிக பெரிய எதிர்பார்ப்பு எகிறி கிடந்தது . படம் தொடங்கியது முதல் உள்ளுக்குள் பேரானந்தம் என்னடா இப்படி எடுத்து இருக்கார் என்று சொல்லிட்டே மிரண்டு போனோம்.சாதாரண கதையை தன்னுடைய அசாதாரமான திரைக்கதையாலும் இயக்கத்திலும் நிருபித்து இருப்பார். படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் இயக்குனரின் அடையாளங்களை பதித்து இருப்பது தெரியும். தன்னால் காதல் கதை களத்தை பின்பலமாக வைத்தே தான் வெற்றி பெற முடியும் என்று நினைத்தவர்களுக்கு ஒரு இயக்குனராய் சரியான முறையில் இப்படத்தின் வாயிலாக பதில் தந்திருப்பார். ஒரு கிரியெட்டராக நிச்சயம் இந்த படம் அவருக்கு மிக பெரிய வெற்றி. இப்படத்தை பற்றி விரிவாக வேறுஒரு பதிவில் சொல்லுகிறேன். படம் முடிந்து எல்லோரும் மிரண்டு போனோம் அன்றே இரவு காட்சியும் பார்த்தோம். கல்லூரி விடுதியில் இப்படத்தில் வரும் முதல் காட்சி போல நடித்து பார்ப்போம் நண்பர்கள் மீண்டும் மீண்டும் நடிக்க சொல்லுவார்கள். அந்தளவுக்கு  இந்த படம் எங்களை கவர்ந்தது என்னை மிக நுட்பமாக உள்வாங்கி கொண்டது. இப்பொழுது செல்வாவின் அடுத்த படைப்பின் தாகம் வெறி தனமாக மாறிவிட்டது.


ஆனால் மிகுந்த ஏமாற்றம் தெலுகுவில் படம் இயக்கி அதை காண வாய்ப்பிலாமல் , இரண்டு வருடங்கள் கழித்து தமிழில் யாரடி நீ மோகினி என்று அவரின் உதவியாளர் இயக்கி வெளிவந்தது. அந்த படம் மிக பிடித்தாலும் இதை ஏன் இங்கே இயக்காமல் விட்டார் என்ற ஆதங்கம் இருந்தது ? பின் அந்த தெலுகு படத்தை எப்படியோ கண்டு பார்த்து மனுஷன் எங்கயும் விட மாட்டான்  போல  என்று சிலாகித்தேன்.


செல்வாவின் இயக்கத்தில் படம் தமிழில் வந்து சுத்தமாக 4 ஆண்டுகள் ஆகி இருந்தது 2010 ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றிய முன் செய்திகள் எல்லாம் பிரமிக்க வைத்தது , எதிர்பார்ப்பு வார்த்தைகளில் சொல்ல இயலவில்லை ஒட்டு மொத்த திரை உலகமும் இப்படத்தை எதிர்பார்த்தது.பொங்கல் அன்று படம் வெளியீடு இம்முறை கல்லூரி முடிந்து வேலைக்கு சென்று கொண்டு இருக்கின்றேன் நண்பர்கள் எல்லாம் புதிது. ஒருவரை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றேன்.ஆயிரத்தில் ஒருவன் யார் என்ன கூறினாலும் எனக்கு இப்படம் பெரும் நம்பிக்கையை செல்வா மேல் வைத்தது. இவரால் என்னவொரு படமும் செய்ய முடியும் இவரை ஒரு வட்டத்தினுள் வைக்க முடியாது. தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்தில் கொண்டு செல்ல முயற்சிக்கும் இவரை என்னால் தவிர்க்கவே முடியவில்லை. கொண்டாடவே செய்கிறேன்.


இதை தொடர்ந்து மயக்கம் என்ன 2011ல்  அப்படியே வேறு தளத்தில் மீண்டும் செல்வா உணரவைத்தார். இந்த படமும் முதல் நாள் இம்முறை வேலை  சென்னையில் வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ் 15 நண்பர்கள் புக் செய்து சென்றோம். படம் முடிந்து அனைவரும் சரி இல்லை என்று கூற ஒருவன் மட்டும் என்னா படம் போங்கடா ரசனை கெட்டவிங்கலா என்று வாதிட்டேன். ஆனால் அந்த 15 நபர்களில் இன்று 10 இல்லை 11 நபர்கள் மயக்கம் என்ன படம் பார்க்க பார்க்க செம்மையா இருக்குடா என்று கூறுகிறார்கள். அது தான் செல்வராகவன் புதுபேட்டை , ஆயிரத்தில் ஒருவன் , மயக்கம் என்ன இந்த படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து பிடித்து போனவர்கள் ஏராளம்.இம்மூன்றும் வேறு வேறு தளங்கள் என்பதில் தான் செல்வா என்ற இயக்குனர் பளிச்சிடுகிறார்.


இம்முறை அவரின் அடுத்த படம் இதோ இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது இரண்டாம் உலகம் என்று அவர் நடத்த போகும் மாயயை காண  பெரும் ஆவலோடு உள்ளேன். சிலிர்க்கின்றது படத்தின் முன்னோட்டத்தை பார்த்தால். செல்வாவின் படத்திற்கு என்று என்னை போல எத்தனையோ நபர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். அவரின் படைப்பின் மேல் உள்ள காதல் எத்தனை பேரை திரையுலகத்திற்கு அழைத்து கொண்டு வர போகின்றதோ. இன்னும் இருபது வருடங்கள் கழித்து பார்த்தால் அப்பொழுது வரும் இயக்குனர்கள் கூறுவார்கள் புதுபேட்டை பார்த்து சினிமாக்கு வந்தேன் சார் என்று. அதில் இருக்கும் அவரின் மிக பெரிய வெற்றி.


செல்வராகவன் தமிழ் சினிமாவின் மாற்று திசை.



(இதுபோல நான் சமகாலத்தில்  பார்த்து முதல் படைப்பில் இருந்து கொண்டாடிய இயக்குனர்களை பற்றி வரும் பதிவுகளில் கூறுகிறேன்.)