Friday, 1 August 2014

ஜிகர்தண்டா - MASS + COOL

கடந்த மூன்று மாதங்களாக எத்தனை படம் பார்த்தாலும் அது பற்றி சிலாகித்து எழுத வேண்டும் என்று தோன்றவில்லை , இன்று படம் தொடங்கிய முதல் ஐந்து நிமிடத்திலேயே நிச்சயம் எழுத வேண்டும் என்று தோன்றிவிட்டது. கார்த்திக் சுப்புராஜ் போட்ட டைட்டில்ஸ் போதும் அது பற்றியே நாலு பத்தி எழுதலாம் அந்தளவுக்கு  அதை ரசிக்க வைத்து விட்டார். முதலிலேயே சொல்லிவிடுகிறேன் இது நிச்சயம் மிக தைரியமான முயற்சி அதில் வெற்றி பெறுவது பார்வையாளர்களாகிய நம் கையில் தான் உள்ளது. நான் பார்த்த திரைஅரங்கில் என்ன மாதிரியான மனநிலையில் எல்லோரும் சென்றார்கள் என்பதை இறுதில் சொல்லுகிறேன்.


குறும்பட போட்டியில் தோற்றவனுக்கு அம்மேடையிலையே முழுநீள திரைப்படம் எடுக்க வாய்ப்பு வருகிறது, அதற்காக அவன் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறுகிறானா என்பதே கதை,எப்பொழுதும் கதை சொல்லுவது எனக்கு பிடிக்காது என்றாலும் இப்படம் பற்றி கூறும்பொழுது கதை ஒரு விஷயமே இல்லை என்பதால் தான் கூறுகிறேன்.முழுக்க முழுக்க இது ஒரு இயக்குனரின் படைப்பு. கதாபாத்திரங்களின்  தேர்வு , காட்சி நேர்த்தி , இசை , கலை , எடிட்டிங் என்று மிக கச்சிதமாக வேலை வாங்கி உள்ளார்.

சித்தார்த் இந்த படத்தில் நடிக்க ஒற்று கொண்டதற்கே அவரை பாராட்டலாம் , அவரைவிட மற்றவர்களுக்கு தான் இப்படத்தில் நிறைய ஸ்க்ரீன் ஸ்பேஸ் உள்ளது. லக்ஷ்மி மேனன் மேக் அப் இல்லாமல் பார்க்க சகிக்கவில்லை, கலகலப்பாக சென்று கொண்டு இருக்கும் காட்சிகளில் இவர்களின் காட்சிகள் தான் பெருந்தடையாக இருந்தது இறுதிவரை.


சிம்ஹா அசால்ட் சேதுவாக  சும்மா சிங்கம் போல நடிச்சு இருக்கார் , அரங்கம் அதிர்கின்றது முதல் பாதியில்  அவரின் காட்சிகளுக்கு, அதுவும் சேதுவை போட வந்தவன் தவறுதலாக இன்னொருவனை போடும் காட்சியில் பின்னணியில் அதை சேது காணும் பொழுது பின்னணி இசையோடு சேதுவின் பார்வையில் செம்ம கெத்து சீன , அதுபோல அவரின் வீட்டில் கொலை செய்துவிட்டு பின்னர் போலீசிடம் பேசி கொண்டு இருப்பது என்று முதல்பாதி முழுக்க அவரின் ராஜாங்கமே அதுவும் இடைவேளை ட்விஸ்ட். கிளாஸ் பிளஸ் மாஸ் படம் டோய் என்று எல்லோரும் கைதட்டி கொண்டே சென்றனர்.

இரண்டாம் பாதி தொடங்கிய ஐந்தாம் நிமிடம் படம் அப்படியே வேறுஒரு கோணத்திற்கு செல்ல தொடங்கிவிட்டது சிறிது நேரம் முதல் பாதியில் இருந்த அந்த ஆர்வம் இதை ஏற்று தயங்கினாலும் பின்னர் இயக்குனரின் கைவண்ணத்தில் அதனுள்ளும் நம்மை இழுத்து கொண்டு சென்று விடுகிறார். அது தான் படத்தின் சிறப்பே.

ஊரணி என்று வரும் கருணாகரன் படத்திற்கு படம் பட்டய கிளப்பிக்கொண்டு இருக்கின்றார். படம் முழுக்க ஹீரோவுடன் வந்து நிஜமாகவே செகண்ட் ஹீரோ கூடியவிரைவில் ஆகிவிடுவார் போல. அதுவும் அவர் கனவு கண்டு பதறும் காட்சிகள் , அடியாட்களுக்கு எப்படி மிரட்ட வேண்டும் என்று டிப்ஸ் தரும் காட்சி , நடிப்பு கற்று கொள்ளும் இடங்கள் எல்லாம் அரங்கில் சிரிப்பதிர்வு அடங்க பல நிமிடங்கள் ஆனது.

சந்தோஷ் நாராயணன் இசையில் ஒரு வழியை  தமிழ் சினிமாவிற்கு வகுத்துள்ளார். சேதுவிற்கு போடும் பின்னணி இசை அட்டகாசம் அதே போல இடைவேளைக்கு முன் நடக்கும் செம்ம ட்விஸ்ட் காட்சிகளுக்கும் அஃதே. படம் முழுக்க பின்னணி இசை பின்னி பிடலேடுக்கின்றது. அதிலும் பாண்டிநாட்டு கொடியின் மேலே பாடல் இந்த ஆண்டின் சிறந்த குத்து சாங்.

கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவில் A FILM BY KARTHIK SUBBURAJ  என்று போட்டு கொள்ள முழுதகுதியானவர். கடைசி அரை மணி நேரம் பார்வையாளர்களின் எண்ணங்களை திரையில் கொண்டு வராமல் தன்னுடைய படம் என்று காட்சிகளால் அழுத்தமாக புரியவைத்துவிட்டார். படம் நல்ல வெற்றி பெற்றால் (???) நிச்சயம் அவரின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியே.


எப்பொழுதுமே ஒரு படத்தின் உண்மையான  வெற்றி இறுதியில் போடப்படும் இயக்குனரின் பெயருக்கு கிடைக்கும் கைதட்டலே, இங்கே இன்று நான் கண்ட இரவுக்காட்சியில் கார்த்திக் சுப்புராஜ் பெயருக்கு இறுதியில் அரங்கம் அதிர கைதட்டல் கிடைத்தது. இது போல நம்ம ஊரிலும் அவருக்கு கிடைக்க வேண்டும் என்ற பேராவலுடன் இருக்கின்றேன்.

Monday, 28 April 2014

நான் அஜித் ரசிகன்- 2

முந்தைய பகுதி

காட் பாதர் படம் படபிடிப்பில் இருந்து கொண்டு இருக்கும் நேரத்தில் இன்னுமொரு பரபரப்பான செய்தி வெளிவர தொடங்கியது நான் கடவுள் என்று பாலா இயக்கத்தில் அஜித் நடிக்க போகிறார் அதற்காக உடல் இளைத்து , முடி வளர்த்து கொண்டு இருக்கின்றார் என்று தினசரிகளில் பரபரத்தது. எங்களுக்கெல்லாம் இது போதும் பாலா படத்தில் நடித்தால் அது அஜித்தின் உச்சமாக இருக்கும் என்று நினைனைத்து கொண்டு ஆர்வமோடு விவாத்திப்போம்.


2005ல் கல்லூரி சேர்ந்தமையால் அங்கேயும் அஜித் என்ற நடிகருக்காக என் குரல் ஓங்கியே ஒலிக்கும் நண்பர்கள் மத்தியில். அப்போது தயாரிப்பாளர் பிரச்சனை என்றும் அஜித் பல நெருக்கடிகளுக்கு உள்ளான நேரம். அதுவரையில் அவரின் ஆதர்சன தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தான் பிரச்சனைகளுக்கு காரணம் என்று செய்தி வந்தது பல இடத்தில் இருந்து. இடையில் உடல் இளைத்த அஜித் வாசு இயக்கத்தில் நடித்த பரமசிவன் 2006 பொங்கல் வெளியீடு கண்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தை அவ்வாறு கண்டதே நிறைவு என்ற ரீதியில் தான் படம் இருந்தது.

2006 ஏப்ரல் திருப்பதி , பேரரசு இயக்கத்தில் வெளிவந்தது திருப்பாச்சி , சிவகாசி என்று வெற்றி படம் கொடுத்து இருந்தமையால் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. படமும் பி & சி கிளாசில் நல்ல வெற்றி படமாக அமைந்தது. ஆனால் எனக்கு பிடிக்கவில்லை இத்திரைப்படம். இடையில் நான் கடவுள் திரைப்படத்தில் இருந்து அஜித் விலகிவிட்டார் , ஏகபட்ட பிரச்சனைகளுக்கு மத்தியில் அஜித் அமைதியாக இருந்தது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. தனக்கு ஒரு பிரச்சனை என்றால் தன் ரசிகர்களை வைத்து பகடைக்காயாக உருட்டுவோருக்கு மத்தியில் தன்னால் யாரும் துன்புற்ற கூடாது என்ற ரீதியில் அஜித் இருந்தது அவரின் மேல் அளவளாவிய பற்று கொள்ள தூண்டியது.


2006 தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த நேரம், நீண்ட சிக்கலுக்கு பிறகு வெளியீடு கண்டது காட் பாதர் இம்முறை வரி விளக்கிற்காக தமிழ் பெயரில் வரலாறு என்று. முதல் நாள் பள்ளி நண்பனுடன் தஞ்சை ஜுபிடெரில் முதல் காட்சி. படம் தொடங்கியதில் இருந்து பரபரப்பாக ஓடிக்கொண்டு இருந்தது இடைவேளை காட்சியில் மொத்த திரைஅரங்கமும் அதிர்ந்தது. இடைவேளை முடிந்து அடுத்த 15 நிமிடங்களில் இரண்டு அஜித் மோதிக்கொள்ளும் காட்சி அது , தன்னுடைய இருக்கையில் இருந்து ஒரு அஜித் எழும்போது திரைஅரங்கில் உள்ள 650 நபர்களும் எழுந்து  நின்று ஆர்பரித்த போது முதல் முறை எனக்கு மயிர்  கூச்செறிந்தது,   திரைப்படத்தை காணும் நிமிடத்தில்.நான் மேற்கூறிய காட்சி, இந்த லிங்கில் காணுங்கள்.


பின்னர் கல்லூரி சென்று அந்த நண்பர்களுடன் திருச்சி மெகா ஸ்டாரில் நாலு முறைக்கு மேல் கண்ட திரைப்படம். அவ்வருடத்தின் பிலிம் பேர் சிறந்த நடிகருக்கான விருது வரலாறு படத்திற்காக அஜித்திற்கு கிடைத்தது. அவ்வருடமே தொடங்கப்பட்ட விஜய் அவார்ட்ஸ்சில் ஆதர்ச நாயகன் விருதும் இப்படத்திற்காக அஜித் அவர்களுக்கே கிடைத்தது. இன்று வரை அது போன்ற மாஸ் & கிளாஸ்  அஜித் -கே.எஸ் .ஆர் கூட்டணி எதிர்பார்த்து கொண்டே இருக்கின்றனர் என்னை போலவே பல ரசிகர்கள்.

2007 பொங்கல், வெற்றிக்காக நான்கு வருடங்கள் காத்திருந்த அஜித் மற்றும் அவர் ரசிகர்களுக்கு வராலறு என்ற  மிக பெரிய வெற்றியை  கொடுத்து நான் கடவுள் என்ற படத்தில் இருந்து அஜித் விலகி பின் புதுமுக இயக்குனரின் படைப்பில் (ப்ளீஸ் திட்டிடாதீங்க) வெளிவந்த ஆழ்வார் மெகா  தோல்வியை  சந்தித்தது.அப்பொழுது உடன் வெளியான  போக்கிரி படமோ விஜய்க்கு இன்னுமொரு கில்லி வெற்றி போல அமைந்தது. அஜித்-விஜய் என்ற நேரடி  போட்டியில் இராண்டாம் முறை திருமலைக்கு பிறகு விஜய் அருமையான வெற்றி பெற்றார்.


2007 ஜூலை 7 , கிரீடம் வெளியானது மீண்டும் புதுமுக இயக்குனர் என்ற பயம் வேறு அதிகமாக இருந்தது ஆனால் என்னை மட்டும் என்று அல்லாமல் பெரும்பாலான ரசிகர்கள் பிளஸ் குடும்பங்களை இப்படம் கவர்ந்தது. இன்றைக்கும் சன் மியூசிக் , இசை அருவி என்ற மியூசிக் சேனல்களில் இப்படத்தின் பாடல் இல்லாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பாடல்கள் ஹிட் அடித்தது. இப்படத்தில் இடைவேளை சண்டை  காட்சி & கிளைமாக்ஸ் அஜித் நடிப்பில் இன்னுமொரு பரிமாணமாக இருந்தது.


2007 டிசம்பர் பில்லா வெளியீடு கண்ட மாதம் ,திருச்சி  டிசம்பர் 14 அதிகாலை டீ கடையில் தெரிந்தது பில்லா படத்தின் எதிர்பார்ப்பு. அந்தளவுக்கு முதல் முறை அஜித் படத்திற்கு எல்லாவிதமானவர்களும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர். எங்கள் கல்லூரி நண்பர்களுடன் திருச்சி கலையரங்கில் 25நபர்கள் ஒரே வரிசையில் கண்டு ஆராவரம் செய்த திரைப்படம் பில்லா. இந்த ஒரே படத்தின் மூலம் அஜித் கிராப் எங்கோ சென்று யாரும் மறுக்க முடியா உண்மை. ஆனால் இப்படத்திற்கு பிறகு தான் நடராஜா சர்வீஸ் என்று கூட கூறபடுகிறார் என்பது பொறாமையின் மிச்சமே.

2008 தீபாவளி ஏகன் இன்று வரை நாங்கள் ஒருபடத்திற்காக அதிகபட்ச்ச விலை கொடுத்து திருச்சியில்  பார்த்தது , ரம்பா திரைஅரங்கில் 250ரூபாய் முதல் நாள் முதல் காட்சி. அதிலும் ஒருசில நண்பர்கள் பின்னர் 350வரை கூட கொடுத்த வந்தனர். எல்லாம் பில்லா செய்த மாயம். இப்படம் கூட அஜித்தின் புது வகையான கதை தேடலை காட்டியது. தன்னுடைய நிஜ உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் அவர் கதை தேடியது இப்படத்தில் தான் தொடங்கியது போல. ஆனால் இதுவும் ஒரு சராசரி படமாக தான் அமைந்தது. அதன் பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்துக்கு பிறகு வெளிவந்த அசல் திரைப்படம் கூட தோல்வியில் தான் முடிந்தது. இப்படி அஜித் தொடர்ந்து வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியாமலேயே முன்னணி நடிகராக இருந்து கொண்டது பலரை வியப்புக்கு உள்ளாக்கியது.



2011,31 ஆகஸ்ட் மங்காத்தா , அஜித்தின் திரைவாழ்வில் மிக பெரிய திருப்புமுனை கொண்ட நாள். இதே போன்று காத்து இருந்து பெற்ற வெற்றி படங்கள் வில்லன் , வரலாறு , பில்லா போன்றவைகள் அப்படத்திலேயே முடிந்து போனது போல் இல்லாமல் இன்றுவரை தாக்கம் உள்ள திரைப்படம். இந்த காலகட்டத்தில் தான் அஜித் என்ற மனிதருக்கு உள்ள  உண்மையான கூட்டத்தை திரை உலகம் கண்டது. மன்றங்களை களைத்த பின்னர் இப்படத்திற்கு இவருக்கு கூடிய கூட்டம் வியப்பின் உச்சமானது அப்போது. சைதை ராஜ் திரைஅரங்கில் தான் ரசிக வெள்ளத்தில் கண்டேன் ரகளையாக.

பின்னர் வெளியான பில்லா 2 (2012) கூட தோல்வி படம் என்று கூறினாலும் அதற்க்கு கிடைத்த ஒபெநிங் எந்தஒரு படத்திற்கும் கிடைத்தது இல்லை என்பதே நிதர்சனம், சிங்கப்பூரில் நான் கண்ட முதல் அஜித் திரைப்படம். இங்கு கூட பல திரை அரங்குகளில் வெளிகண்ட வகையில் அதை உறுதி செய்தது.

இதோ இப்பொழுது தான் ஆரம்பம் & வீரம் என்று தொடர்ச்சியாக வெற்றி தந்து ரசிகர்களை சந்தோசத்தில் திளைக்க வைத்து இருக்கின்றார். இனி அடுத்து வரப்போகும் கௌதம் மேனன் படம் என்னவொரு எதிர்பார்ப்பில் இருக்கின்றது என்பதை சொல்லவா வேண்டும்.



நான் அஜித் ரசிகன் , என்னவொரு நிலையிலும் எப்பொழுதும் நான் அஜித் ரசிகன். 

Sunday, 27 April 2014

நான் அஜித் ரசிகன்-1

என்னுடைய பால்ய காலத்தில் வீட்டில் ஒளியும் ஒலியும் என்றால் எல்லோரும் ஆஜர் ஆகிவிடுவோம். அப்பொழுது தொடர்ந்து நான்கு வாரங்களாக அந்த பாட்டை போட்டு கொண்டே இருந்தனர்.முதல் முறை கேட்டபோதே பிடித்துவிட்டது என்றாலும் மீண்டும் மீண்டும் பார்த்தபொழுது பாட்டைவிட அதில் வந்த நாயகனை மிக பிடித்துவிட்டது . அந்த பாட்டு "உன்னை பார்த்த பின்பு நான்" என்றால் பாடல் காதல் மன்னன் திரைப்படத்தில் இருந்து. அதற்குமுன் எல்லாம் எல்லோரையும் போல விஜயகாந்த் சண்டைக்காக பிடித்ததும் பின்னர் எல்லோரையும் போல ரஜினிகாந்தை பிடித்தது மாறிப்போனது என்றல்லாமல் ரஜினிக்கு பிறகு ஆசை நாயகன் அஜித் என்று ஆனது.பின்னர்  தூர்தர்சனில் பவித்ரா (அமராவதி போட்டது போல நினைவே இல்லை) படம் கூட  சலிக்காமல் எத்தனை தடவை போட்டாலும் பார்த்த நினைவு எல்லாம் வருகின்றது கொஞ்சம் நினைவோட்டத்தை ஓட்டி பார்த்தால்.இவைகள் ஐந்தாவது படித்த போது என்று நினைக்கின்றேன், 1998 . 



பின்னர் அமர்க்களம்(1999) திரைப்படத்தை தஞ்சை சாந்தி  திரைஅரங்கில் கண்ட பொழுது தான் மிக பிடித்து போனது, மூச்சு விடாம பாடுன  பாட்டு அதுக்கு அஜித் பயங்கரமா நடிச்சு இருக்காரு. சண்டைலாம் சூப்பர போட்டுருக்காரு. ரகுவரன் கூட பேசுவாரு பாரு  ஆவ்வூனு நண்பர்களிடம் பேசிய ஞாபகம் இப்பொழுது கடந்து போனது தெரிகிறது. இதற்க்கு முன் வந்த வாலி திரைப்படம் கூட தஞ்சை லோக்கல் கேபிள் டிவி ஜென் தொலைகாட்சியில் தான் பார்த்தேன் என்று நினைக்கின்றேன்.


அல்டிமேட் ஸ்டார் தல ஆன போது தான் உச்சமானது , தீனா (2001) எட்டாவுது படித்தபொழுது படத்தின் ஸ்டில் வந்த பிறகு  சில நண்பர்கள் தேள் செயின் போட்டுவருவது அதை பார்க்கும் பொழுது எனக்கு போட்டு கொள்ள ஆசையாக இருக்கும் ஆனால் அது இறுதி வரை நான் போட்டு கொள்ளவில்லை. படம் பார்க்காமலையே தீனா படத்தை பற்றியே பேசிய காலங்கள். படம் பார்த்த நண்பனை அருகில் அமர்த்தி முழுபடத்தையும் சொல்ல சொல்லி கேட்டு கொண்டே மனதில் பார்த்து கொண்டு இருந்த நேரம். அப்பொழுது தான் இன்னொரு கூட்டம் ப்ரெண்ட்ஸ் படத்தை பற்றி பேசி கொண்டு இருக்கும் போது. முதல் முறை போடா அஜித் தான் சூப்பரு என்றும் அவர்கள் ஹ்ம்ம்க்கும் இளைய தளபதி படத்தை பாருங்கடா என்று எங்களை பிரைன் வாஷ் அப்பொழுதே சண்டை ஆரம்பிக்கும் முன்னேயே கூற தொடங்கி இருந்தனர்.



பின்னர் வந்த சிட்டிசன்(2001) படம் எல்லாம் அவரின் பலவிதமான கெட் அப் எங்களின் விவாதங்களுக்கு போதுமானதாக இருந்தது. அப்படங்களை எல்லாம் நான் பார்க்கவில்லை ஆனால் நான் பெரிதாக வியக்கும் எங்களின் சீனியர்கள் , பஸ் ஸ்டாண்டில் கெத்தாக திரிபவர்கள் , ஆட்டோ ஸ்டாண்டில் உள்ளவர்கள் என்று அனைவரும் அஜித் விரும்பிகளாக தீனா ஸ்டில் அவர்களின் நோட் அட்டைகளிலும் , ஆட்டோ முன்  கிளாஸிலுமாக இருந்தது பெருமிதம் கொள்ளவைக்கும்.தினகரன் , தினத்தந்தி பேப்பர் சினிமா பக்கம்  என்னிடம் நீண்ட நேரம் அல்லோலப்படும்.இதன் பிறகு வந்த ரெட்(2002) படத்திற்கு  தஞ்சையில் அதுவரை வைத்திராத அளவுக்கு கட்டவுட்கள் வைத்து நகரையே பிரமிக்க வைத்து இருந்தனர் என்ற பேச்சு தான் அதிகமாக இருந்தது. அப்படத்தின் தோல்வி பயங்கரமாக  ஓட்டபட்டோம் அதுவும் நடனம் என்று ஓட்டும் போது எதுவும் சொல்லிக்கொள்ளாமல் கிட்டத்தட்ட ஓடி போய்விட தோன்றும்.தொடர்ந்து வந்த ராஜா(2002) பட தோல்வி அதற்க்கு மேல் ஓடவைத்தது எங்களை அதிலும் சிலர் எங்க தளபதிய வச்சு இவர் தாண்டா துள்ளாத மனமும் துள்ளும் படத்த எடுத்தாரு இப்போ உங்க ஆள வச்சு எடுத்தாரு ஊத்திகிச்சு என்று கூற , நாங்களோ அடேய் இந்த படத்துல உங்க தளபதி நடிச்சு இருந்தாலும் ப்ளாப் தான் என்று எவ்வளவோ மல்லுகட்டி கூறினாலும் இறுதிவரை அந்த நண்பன் ஒற்றுகொள்ளவே இல்லை.


எல்லோருக்கும் நாங்களும் வில்லன் ஆகிவிட்டோம் வில்லன்(2002)  வருவதற்கு முன்னே. ஆனால் வில்லன் எங்களை ஹீரோ ஆக்கிவிட்டது வருகைக்கு பிறகு. அப்பொழுது உடன் வந்த பகவதி நாங்கள் ஓட்டுவதற்கு வசதியாகவும் வில்லன் படத்தின் இரட்டை வேட நடிப்பு பெருமிதம் கொள்ள வைக்கவும் நன்றாக இருந்தது. ஓரளவுக்கு நன்கு புரிந்து கொண்டு விவாதம் செய்யும் போது டெக்னிகலாக திரைகதை யுக்திகளை எடுத்து கூறி பேச துவங்கிய காலங்கள். அதுக்கு ஏற்றது போல வில்லன் படம் எங்களுக்கு அமைந்தது. அது போலவே தினகரன் சிறந்த நடிகர் அவார்டும் , பிலிம் பேர் அவார்டும் அவ்வருடத்தில் அவருக்கே கிடைத்தது அப்படத்திற்காக. தப்பு தண்டா பாடல் பற்றி இங்க பேச வேணாம் அதுவும் ஒரு விவாதம் ஆனது அப்படத்தில்.

பின்னர் ஒருவருட இடைவெளிக்கு பிறகு 2003 தீபாவளி வெளியீடாக வந்த ஆஞ்சநேயா படத்தின் கதி ஊரே அறியும். ஆனால் அதற்க்கு முன் நாங்கள் தந்த அலப்பரைகள் வல்லரசு டைரக்டர் படம் செம்மையா இருக்க போகுது என்றெல்லாம் ஹைப் கொடுத்துட்டு இருந்தோம். படம் வெளியானா அடுத்த நாள் பள்ளிக்கு செல்லாமல் நண்பர்கள் படை சூழ தஞ்சாவூர் படம் பார்க்க செல்லும் போதே திருமலை என்று சிலர் , நாங்க தல படம் தான் என்று கூற , மூன்றாவுது அணி பிதாமகன் என்றது. அங்கு போய் முடிவு செய்து கொள்ளலாம் என்று சென்றோம். தஞ்சை சாந்தியில் தல படம் கமலாவில் பிதாமகன் சற்று அருகே இருந்த ஜுபிடெரில் திருமலை. தல ரசிகர் போல தெரிந்த ஒருவரிடம் பாஸ் படம் எப்படி என்று கேட்க அவரோ எதுவும் சொல்லாமல் பார்த்துவிட்டு தலையை குனிந்து கொண்டார்.பின்னர் வம்படியாக கேட்க, நேத்து பாக்குறப்போ நல்லா இருந்துச்சு ஆனா இன்னைக்கு திரும்ப வந்து பார்த்தேன் என்று இழுக்க நாங்கள் பாஸ் இன்னு ஷோ முடியலை பாஸ் என்று பதறினோம் அவரோ ஆமாங்க உள்ள விஜய் ரசிக நண்பர்களை அழைத்து வந்தேன் ஒட்டுறானுங்க அதான் வெளிய வந்துட்டேன் என்று கூறி எங்களை இறக்க வைத்து விட்டார்.அதை கேட்ட மற்ற குரூப் நண்பர்களோ சிரித்து கொண்டே எங்களை பார்த்தனர் ஆனால் விடவில்லையே கடைசி வரை போராடி திருமலை அல்லாமல் பிதாமகன் சென்று.அடுத்தநாள் வந்து ஆஞ்சனேயே தனியாக பார்த்தோம் பயத்தில். முதல் முறை நாங்கள் சொல்லி கொண்டும் விட்றா தல அடுத்த படத்துல பட்டய கிளப்பிடுவாரு என்று சொல்லிவிட்டு ஒரு கட் அவுட்டை பார்த்தோம் அதில் இருந்த வாசகம் எங்களை கூட நினைத்து நினைத்து சிரிக்க வைத்து விட்டது வெளிய சொல்லலையே அதை. அந்த வாசகம்,
"திருமலையை தூக்க வரார்டா எங்க ஆஞ்சநேயா "

இந்த காலகட்டத்தில் தான் சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டும் நான் அதை நோக்கி தான் சென்று கொண்டு இருக்கின்றேன் என்று வெளிப்படையாக கூறினார் அஜித். அதனாலையே எல்லோரின் கோபங்களுக்கு உள்ளானார் ஆனால் ரசிகர்கள் அவருக்கு உற்ற துணையாக இருந்தனர். ஜி பட படபிடிப்பு எங்கள் திருவையாறில் நடந்தது வெறும் நான்கு மணிநேரம் எங்கள் ஸ்ரீனிவாச ராவ் மேல் நிலை பள்ளி பின்புறம் உள்ள காவேரி ஆற்றில். அப்பொழுது தான் அஜித்தை நேரடியாக முதலும் இறுதியுமாக நான் கண்டது. ஆற்றில் அங்கங்கே ஓடி கொண்டு இருந்த நீரை முகத்தில் அவ்வப்போது அள்ளி தெளித்து கொண்டு நடன காட்சியில் ஆடிக்கொண்டு இருந்தார். நாங்கள் பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு அந்த படபிடிப்பை கண்டு களித்து கொண்டு இருந்தோம்.

கில்லி திரைப்படம் மாபெரும் வெற்றியை சுவைத்து கொண்டு இருந்தநேரம் , அஜித் பிறந்தநாள் மே 1  அன்று வெளிவந்த ஜனா படுதோல்வியை சந்தித்தது. கோடைவிடுமுறை என்பதாலும் +2 ஸ்பெஷல் கிளாஸ் வேறு இருந்த நெருக்கடியில் அப்படத்தை காண வாய்ப்பில்லாமல் போனது ஆனால் கில்லி படத்தை அந்நாட்களில் திரை அரங்கில் கண்டோம் படம் பிடிக்க கூடாது என்ற நினைப்பிலேயே கண்டேன் என்பதை இப்பொழுது நினைத்தால் கூட  சிரிப்பாக இருக்கின்றது. பின்னர் பள்ளி தொடங்கிய போது ஜனா படத்தை வம்படியாக எங்களிடம் சொல்லி சொல்லி வெறுப்பேற்றினர் நண்பர்கள். 


2004 தீபாவளி அட்டகாசம் வெளியீடு சரண் இயக்கம் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டு இருந்தது எப்போதும் இரட்டை வேடம் என்றால் அஜித் செண்டிமெண்ட் வொர்க் அவுட் ஆகும் என்று உறுதியை நம்ப வைத்த திரைப்படம் அட்டகாசம். 2002க்கு பிறகு அஜித்தின் வெற்றி படவரிசையில் இணைந்த அட்டகாசம் ரசிகர்கள் மதித்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இப்படத்தின் ஸ்டில் தான் இன்றைக்கும் கூட மிக பிரபலம். இப்படத்திற்கு பிறகு வெளியான அஜித் அவர்களின் எந்த திரைப்படத்திற்கும் திரைஅரங்கில் வைக்கப்படும் கட் அவுட்களில் அட்டகாசம் ஸ்டில் இல்லாமல் இருக்கவே இருக்காது. தல என்று அஜித்தை எல்லோரும் அழைக்க தொடங்கிய காலமும் அதுவே அதற்க்கு ஏதுவாக அமைந்த பாடல் ''தல போல வருமா ''. தஞ்சை யாகப்பா திரைஅரங்கில் வெளியான அடுத்த நாள் நண்பர்களுடன் சென்று மதியகாட்சிக்கு 12மணி முதல் டிக்கெட் கவுண்டரில் நின்று 2அடிக்கு குறைவான அகலம் கொண்ட கவுண்டரில் நீண்ட வரிசையில் மூச்சு விடகூட திணறி கொண்டு 2 மணிநேரங்கள் தவித்து சென்று , பரவசமாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடிய படம் . ரசிகர்களுக்காகவே அஜித் நடித்த அட்டகாசம்.


அஜித் - கே.எஸ் ரவிக்குமார் கூட்டணி மீண்டும் இணைகிறது , அஜித் மூன்று வேடங்களில் நடிக்கபோகிறார், ஏ.ஆர். ரஹ்மான் இசை , பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு .படத்தின் பெயர்  காட் பாதர் என்று தினசரிகளில் பரப்பாக செய்தி வெளி வரத்தொடங்கியது. அதே போல அந்நேரத்தில் வதந்திகளும் வந்தது அஜித் நடிக்கும் மூன்று வேடங்களில் ஒன்று  அரவாணி என்று கூட. அந்த பரபரப்பில் 2005 பிப்ரவரி ஜி திரைப்படம் வெளிவந்தது. அதே தஞ்சை யாகப்பாவில் முதல்நாள் அஜித் அவர்களின் திரைப்படத்தை முதல்முறையாக  திரைஅரங்கில் காண்கிறேன்(அன்று முதல் இன்றுவரை முதல் நாள் தான் பிறகு வெளிவந்த திரைப்படங்களுக்கு). ராஜா ,ஆஞ்சநேயா , ரெட் , ஜனா போன்ற படங்களை போலல்லாமல் இன்றைய அரசியல் யதார்த்தத்தை கூறியவகையில் எனக்கு பிடித்த படமே ஜி.  ஆனால் இதுவும் ஒரு தோல்வி படமாகவே அமைந்தது. எனக்கு இன்றைக்கும் இப்படத்தின் இயக்குனர் மேல் கோபம் தான் அவர் லிங்குசாமி. தன்னுடைய படங்கள் என்று அவர் ஜி தவிர ஒதுக்கி தான் பத்திரிகையில் பேசுவார் அவரின் தோல்வி படமான பீமாவை கூட பெருமையாக குறிப்பிடுவார் ஆனால் ஜி படத்தை பற்றி வாய் திறக்க மாட்டார். இப்பொழுது சிவா கார்த்திகேயேன் எப்படி மனம் கொத்தி பறவை என்ற திரைப்படத்தில் வேற்று கிரகத்தில் இருந்து ஒருவர் நடித்து இருப்பதை போன்று நடந்து கொள்வதை போல்.




                                                                                                                          தொடரும் ....

அடுத்த பகுதி

Tuesday, 22 April 2014

உப்பு நாய்கள்-நாவலின் என் வாசிப்பு அனுபவம்

 (லக்ஷ்மி சரவணகுமாரின்)


புதுப்பேட்டை , ஆரண்யகாண்டம் போன்ற படங்களை பார்க்கும் போது அக்கதையின் கதாபாத்திரங்களை நாம் உள்வாங்கினால் தான் அப்படங்களை ரசிக்க முடியும். அதைவிட்டு தர்க்க நியாயம் பேசினால் அதுவும் ஒரு சராசரி படங்களை போலவே மிஞ்சும். அப்படி தான் இந்நாவலை வாசிக்கும் போது கூட ஆரம்ப அத்தியாயங்களே யாருடைய வாழ்க்கையை நாம் படித்து கொண்டு இருக்கின்றோம் என்பதை நமக்கு விளங்க வைத்துவிடுகிறது. அதை புரிந்து நாம் மேற்கொண்டு படித்தோம் என்றால் ஒரு ராவான வாசிப்பு அனுபவம் கிடைக்கும். சமூகத்தில் விளிம்பு நிலை வாழ்க்கை வாழ்வோரின் பக்கங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.

எந்தவொரு நாவலை வாசிக்கும் போதும் நான் அதற்க்கு பிற எழுத்தாளுமைகள் (பிரபலங்கள்) எழுதிய மதிப்புரைகளை வாசிக்காமல், முழுநாவலையும் வாசித்துவிட்டு பின்னரே அவர்களின் கருத்துகளை வாசிப்பேன். அது இவ்வாசிப்பிலும் தொடர்ந்தது. ஒவ்வொரு சராசரி மனிதர்களுக்குள்ளும் குறிப்பிட்ட குற்றங்களுக்கான எல்லை இருக்கும், அதை அவர்களின் செயல்களில் தாண்டாமலும் பின்னர் மற்றோர் செய்வதில் கூட அவர்களுக்கு என்று கூட நாமே ஒரு எல்லை வைத்து கொள்ளுவோம்.அப்படி தான் இந்நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு தொழிலை நம்பி இருக்கின்றனர்.

பிக்பாக்கெட் , விபச்சாரம் , குழந்தை கடத்தல் , போதை வஸ்த்து விற்பனை என்று போகின்றது. கொஞ்சமும் சமரசமின்றி தன்னுடைய எண்ணங்களை எழுத்தால் கொண்டு வந்து இருக்கின்றார் நாவலின் ஆசிரியர்.

சம்பத் செய்யும் செயல்கள் ஒருசிலருக்கு வாசிக்கும் போது அன்னியமாக வெறுப்பாக தோன்றும், இன்னும் சிலருக்கு மணியின் செயல்கள் அருவெறுப்பாக இருக்கும், இதை போல முத்துசெல்வி , செல்வி , தவுடு , கோபால் , ராஜீ, ஷிவானி , சேட்டு, சுந்தர் , சம்பத்தின் அம்மா , சோபி, இளவாஞ்சளின் என்று அவரவர்களின் மனதில் நாம் வகுத்து வைத்து உள்ள பிரிவின் படி அவர்களின் குற்றசெயல்கள் நமக்கு அருவெறுப்பாக ஏற்று கொள்ள முடியாமல் இருக்கும். எனக்கு அப்படி மிகவும் வக்கிரமாக மனதில் தோன்றியது ராஜீயின் செயல்கள் தான் எனக்கு அந்த பாத்திர படைப்பின் மேல் உச்சபட்ச்ச வெறுப்பை கொடுத்தது.இதை நாம் ஏற்று கொள்ளுவதை விட எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பு தான் நாவல் ஆசிரியரிடம் இருக்கின்றது என்பதை வாசிக்கும் போது உணர முடிகிறது.

நாவலிலேயே என்னை மிகவும் உருகவைத்தது ஆதம்மா என்று சிறுமியும் , ஆர்த்தி என்ற பெண் பாத்திரமும் தான். முதலில் பாகம் ஒன்றில் விறுவிறுப்பாக வாசித்து முடித்தவுடன் பாகம் இரண்டில் தொடங்குகிறது இந்த சிறுமியின் கதை, அவளின் கதை சில அத்தியாயங்களில் தொய்வாக செல்வது போல தோன்றியது பின்னர் சம்பத் குழந்தை கடத்தல் தொழிலுக்கு மாறும் பொழுது நெஞ்சில் ஒருவித படபடப்பு வந்துவிடுகிறது எங்கே இறுதியில் இந்த சிறுமியை கடத்துவது போல வந்துவிடுமோ என்று சினிமா போல நினைக்க தோன்றிவிட்டது ஆனால் அது போல் அல்லாமல் நாவலாசிரியரையே இறுதி வரை பின்தொடர்வது போல இருந்தது சிறப்பு .

வாசிக்கும் போதே எனக்கு உறுத்தியது ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப வாசகனுக்கு கூறுவது போல இருந்தது(சம்பத்தின் தொழில் திறன் , ஆதம்மா விருப்ப விளையாட்டு இன்னும் சில ) , சில வார்த்தைகளை ஒரே பத்தியில் நான்கு , ஐந்து முறைகளுக்கு மேல் எடுத்து கூறியது போன்றவைகள் தான் உறுத்தலாக இருந்தது. பின்னர் ஒவ்வொரு அத்தியாயமும் இலக்கிய நடையில் முடிக்க வேண்டும் என்று மெனக்கெட்டு இறுதி பத்தியை எழுதியது போலவும் தோன்றியது.மணியின் கதை என்ன ஆனது சுந்தரிடம் மீண்டும் சம்பத் வந்தவுடன் அவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்தேன் ??? , அளவுக்கு மீறிய காமம் என்பது எல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை அவர்களின் வாழ்வில் அவ்வாறு இருப்பது போலவே நினைத்து வாசித்தமையால் இருக்கும் போல எனக்கு.

லக்ஷ்மி சரவணகுமார் அவர்களுக்கு பாம்புகள் மீது அளவில்லா ப்ரியம் இருக்கும் போல முன்னர் அவரின் யாக்கை சிறுகதை தொகுப்பில் கூட ஒரு சிறுகதையில் முழுக்க ஸர்பங்களை மையபடுத்தியே இருந்தது, இந்நாவலில் கூட அந்த ஈர்ப்பு தெரிகின்றது. காமத்தில் திளைக்கும் போது கூட ஸர்பங்களை எடுத்து காட்டி கூறுகிறார்.

எனக்கு நாவலை வாசித்து முடித்தவுடன் தோன்றியது, வாசிக்கும் போதே இவ்வளவு சுவாரசியமாக இவர்களின் முகங்களை தேட தூண்டுகிறதே. இதை ஏன் ஒரு ராவான திரைப்படமாக எடுக்க கூடாது நல்ல கதாபாத்திர தேர்வுடன் சமரசமின்றி லக்ஷ்மி அவர்களே எடுத்தால் என்னவோ என்று தான் நினைத்தேன். யாருக்கு தெரியும் அவர் கூட நினைத்து இருப்பார்??? இயக்குனர் ஆக தானே முயற்சி செய்து கொண்டு இருக்கின்றார். வாழ்த்துக்கள் நண்பா