Thursday 10 October 2013

இவரின் படங்களில் கற்றேன் பல

கல்லூரி வாழ்க்கை ஓவ்வொரு மாணவர்களுக்கும் அது போல் ஒரு ஆனந்தமான சூழல் வாழ்வில் கிடைப்பது மிகவும் அரிது, தன்னுடைய முழுமையான தேடலை தொடங்கும் காலம் அதில் பலர் வெற்றி தோல்வி என்று அடைந்தாலும் எல்லோரும் நிச்சயம் பெறுவது வாழ்க்கைக்கான மிக பெரிய பாடம் அனுபவம் , அந்த அனுபவ  சூழலே பின் வரும்  மிக பெரிய இடையூறுகளை எளிதாக கையாள கற்று தந்து இருக்கும். அந்த அனுபவம் உன்னாலும் உனக்கு கிடைக்கும் , உன் நண்பனாலும் உனக்கு கிடைக்கும் ,  உன் வாசிப்பாலும் உனக்கு  கிடைக்கும் , நண்பர்களோடு நீ செல்லும் திரைபடங்களாலும் கிடைக்கும். இவைகளின் அனுபவங்கள் எப்பொழுதும் கிடைக்குமே என்று நீங்கள் நினைத்தால் , எங்கே கிடைத்தாலும் இந்த சுழல் போல கிடைக்காது. இன்னும் நன்றாக சொல்ல போனால் என்னுடைய தற்பொழுதைய நிலை கல்லூரி முடித்து ஐந்து வருடங்கள் ஆகின்றது. இன்றும் நான் என்னுடைய பல கடினமான சுழலில் அந்த அனுபவத்தை எடுத்து கொண்டே செல்லுகிறேன்  என்பது மறுக்க முடியாத உண்மை.

அதுபோல் அப்பொழுது நண்பர்களோடு அன்று பல திரைப்படங்கள் சென்று இருந்தாலும் எங்கள் எல்லோருக்கும் அன்றும்  இன்றும் என்றும் நிறைய கற்று கொடுத்த ஒரே திரைப்படம் இது மட்டும் தான் , எங்களின் சில தவறுகளை , நாங்கள் மறந்ததை எங்களுக்கு நினைவூட்டியது அதிகம் இந்த திரைப்படமே. இப்படம் மூலமாகவே எனக்கு கிடைத்த இன்னுமொரு மிக பெரிய பொக்கிஷம் அந்த இயக்குனர்.

இயக்குனர் ராம் "கற்றது தமிழ்" இத்திரைப்படம் தான் என்றும் கற்க நிறைய உதவி புரிகின்றது.


கற்றது தமிழ் படம் பார்த்து முடித்தவுடன் குறைந்தது மூன்று நாட்கள் நிம்மதியாக எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. எல்லாவகையிலும் இப்படமே நினைவில் வந்து மிகவும் ஒரு ரண வேதனை ஆக்கியது. நண்பர்களுடன் இப்படத்தை பற்றி கலந்து ஆலோசிக்கும் போதும் பலவகையான விஷயங்களை பற்றிய பேச்சுகள் நீளும். எங்களுக்கு தெரியாதவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையை இது தந்தது.

பொறியியல் படித்து கொண்டு இருந்த எங்களுக்கு எங்கள் நண்பர்கள் என் கல்லூரியில் ஏன் இன்றும் பலதரப்பட்ட மக்களிடம் சிவில் இன்ஜினியரிங் என்று கூறினால் கொஞ்சம் ஏற்ற இறக்கமாக தான் காணுவார்கள். அதை ஒரு பிரிவு என்று ஏற்று கொள்ள கூட தயங்குவது நான் அதிகம் கண்டது (ஆனா உலக அளவில் அதற்கான மதிப்பு இன்று கண் கூட உணர்கிறேன்) . அதே போன்று தமிழ் மொழி படித்தவர்களின் வலிகளை காணும் போது எங்களையும் அறியாமல் பயந்தோம்.


உலகமயமாக்குதல் என்றால் என்ன என்பதின் உண்மை அர்த்தத்தை இந்த படத்தின் மூலமே கற்றோம்.

 ஒவ்வொரு மக்களும் தன் நாட்டின் ஏற்ற இறக்க பொருளாதார நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று உரைத்தது.

நாட்டின் உணமையான வளர்ச்சி என்பது எதில் உள்ளது என்பதை எடுத்து கூறியது.

எந்த படிப்பு  படித்தாலும் எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்து உரைத்தது.

தனிப்பட்ட சந்தோசம் மற்றவரின் இடையூறுகளை எப்படி பெற்று தரும் என்று விளக்கியது.

இவைகள் எல்லோரின் வாழ்விற்கும் மிக அத்தியாவசிய தேவைகள். திரைப்படமாக குறைகளை தாண்டியும் இது பாதுகாக்க வேண்டிய முக்கியமான திரைப்படம்.

தற்பொழுது வெளிவந்த தங்கமீன்கள் அன்பை, உணர்ச்சிகளை, உணர்வுகளை, குடும்ப உறவுகளை, கல்வி முறையை, குழந்தை வளர்ப்பு முறையை, இன்றைய ஆசிரியர்களின் நிலையை, சமூகத்தின் விளம்பர யுக்தியை, என்று சகலமும் நாம்  காட்சியாக காணும் பொழுது இது திரைப்படம் என்பதை மறந்து நம்மில் நடந்ததை நினைவு படுத்துவதே இதன் சிறப்பு.


அடுத்து அவரின் வெளியீடாக வரபோகும் தரமணி இப்பொழுதே எனக்குள் மிகபெரிய ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரையில் எதை குறை யாரால் அதிகம்  அவதி என்று கூறினாரோ. இப்பொழுது அவர்களின் காதலை கதையை கூறபோகிறார். அவர்களின் பக்கம் இருக்க போகும் நியாயத்தை எடுத்து கூறுவார் என்று நினைக்கின்றேன்.என்னை பொருத்தவரை அவரின் படத்தில் எதை தெரிந்து கொள்ள போகின்றேன் என்ற ஆர்வம் தான் இருக்கும். அதே போல தரமணி படத்திலும் எதை கற்க போகின்றேன் என்று எதிர்பார்த்துகொண்டே இருப்பேன்.

இயக்குனரின் ராமின் திரைப்படத்தை ஒரு முறை நீங்கள் கண்டால் இருபது சிறுகதைகள் வாசித்த உணர்வும் அல்லது ஒரு நாவல் வாசித்தது போலவும் நிச்சயம் உணர முடியும்.அவ்வளவு நேர்த்தியாக பல காட்சிகள் ஏன் முடிகிறது என்ற ஆதங்கம் தரும். இவர் படங்களில் வரும் காட்சி படுத்தும் இடங்கள் கூட பல கதைகள் பேசும். ஒரு பழமொழி சொல்லுவாங்க அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று அதுபோல ராம் அவர்களின் படத்தின் தரம் இவர் தேர்வு செய்யும் இடங்களிலேயே தெரிந்து விடும் போல. என்னுடைய ஆசையும் , சிறந்த உணர்வுபூர்வமான , அத்தியாவசிய அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய  நாவல் ஒன்றை ராம் அவர்கள் திரைப்படமாக நமக்கு தர வேண்டும். அதையும் கற்க வேண்டும்.


திரைப்படம் என்பது திரைபாடமாக இருக்கும்பச்சத்தில் அது எத்தனை காலம் ஆனாலும்  அந்த படைப்பிற்கு அழிவு இல்லை. பிரபாகரன்,ஆனந்தி , தமிழ் வாத்தியார், செல்லம்மாள்,கல்யாணி,எவிட்டா மிஸ் இவர்களுக்கும் இவர்களின் கதைகளுக்கும் (கற்றது தமிழ் & தங்க மீன்கள்)  என்றும் அழிவே இல்லை.இன்னும் பல லட்சம் நபர்கள் இவர்களை கற்க வேண்டும்.

என்னை கவர்ந்த இயக்குனர் ராமிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள். இன்னும் பல சிறந்த படைப்புகளை உங்களிடம் இருந்து எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

6 comments:

  1. ராமிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நல்லா எழுதி இருக்கீங்க. என்னுடைய பார்வை இதோ.
    எனக்கு ராமின் இரண்டு படைப்புகளும் ஏனோ பிடிக்காமல் போய் விட்டது.
    // ஒவ்வொரு மக்களும் தன் நாட்டின் ஏற்ற இறக்க பொருளாதார நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று உரைத்தது.
    நாட்டின் உணமையான வளர்ச்சி என்பது எதில் உள்ளது என்பதை எடுத்து கூறியது.
    எந்த படிப்பு படித்தாலும் எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்து உரைத்தது.//
    பாஸ், இந்த வரிகள் "கற்றது தமிழ்" படத்தை குறிக்கிறதா..??? கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா..??? எந்த காட்சிகளில் உங்களுக்கு அப்படி தோன்றியது என்று..??
    கதாநாயகன் காரணமேயில்லாமல் (காசு இல்லாமல்) ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கேட்ட ஒருவரின் மண்டையில் ஆணியை சொருகி விடுவான், தன்னை தேடி வரும் ரெண்டு போலீஸ்காரர்களை கொன்று விடுவான்.
    "Touch me if you Dare" ன்னு போட்ட ஒரு பொண்ணு கிட்ட மோசமா நடந்துகுவான். டெல்லியில் கேங் ரேப் பன்னுனவக்கும் அந்த கதாபாத்திரத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கு சொல்லுங்க. காலேஜ்/ஸ்கூல் படிக்கிற விடலை பசங்களுக்கு வேணா அந்த காட்சி கை தட்டி ரசிக்கிற மாதிரி இருக்கும். கல்லூரி வாழ்க்கையை விட்டு வெளியே வந்து சமூகத்துல வேலைக்கு போக ஆரம்பிச்சு, ஆறு ~ ஏழு வருஷம் பொண்ணுங்க கூட ஒண்ணா வேலை செய்ய ஆரம்பிச்ச அப்புறம் அத்த காட்சியின் வக்கிரம் உங்களுக்கு புரிஞ்சு இருக்கும். அதுக்கு அப்புறமும் உங்களுக்கு அந்த வக்கிர காட்சி புடிச்சு இருந்தா நீங்க இவரை கொண்டாடுறதுல நான் ஒன்னும் சொல்ல போறது இல்லை. படம் அஞ்சு வருஷம் முன்னாடி பார்த்தது. ரெண்டு நாள் மனசே சரி இல்லாம இருந்தது, இது மாதிரியான வக்கிர/சைக்கோ படத்தை பார்த்து தொலைச்சுட்டோமுன்னு..

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா!!! நாட்டின் பொருளாதாரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தது , அந்த கால் சென்டர் நபரை உட்கார வைத்து பேசுமிடம் அந்த ஊருக்கு இங்கிருந்து வேலை பாக்குறேன் அது ஏன் ? எதுக்கு? அவுங்களுக்கு நாம ஏன் இங்கிருந்து பார்க்கணும் , அவுங்கள யாரு இங்க விட்டா யாரு அனுமதி தந்தா அதனால யாருக்கு பாதிப்பு. இது போல பல கேள்வி கேட்க்க தோனுச்சு நண்பா. நாட்டின் உண்மையான வளர்ச்சி எதில் உள்ளது என்பது படத்தின் இறுதியில் பொது மக்களிடம் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கருத்து கேட்பது போல காட்சி அமைப்புகள் இருக்கும் அது படத்திற்காக எடுக்காமல் நிஜமாக இந்த கருத்துகளை மையம் வைத்து கேட்கப்பட்ட கேள்வியே அதை பார்த்தபொழுது அதில் சமூக ஆர்வலர் பேராசிரியர் கூறுவார் உடம்பின் வளர்ச்சி என்பது உடல் முழுக்க வழமாக இருக்க வேண்டும் அதைவிடுத்து கால் மட்டும் வளர்ந்தால் அது யானை கால் நோய் என்று அது போல நாட்டின் வளர்ச்சியும் ஒட்டுமொத்தமாக இருக்க வேண்டுமே தவிர ஒருசாரர் மட்டும் முன்னேறிக்கொண்டு இருந்தால் நாடு பலவீனம் தான் ஆகும் என்று படமே மைய கருத்தே இது தான் நண்பா. உங்களுக்கு வாசிப்பில் ஆர்வம் இருந்தால் பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புத்தகத்தை படியுங்கள் எனக்கும் ஒரு நண்பர் தான் அறிமுகபடுத்தினார் அந்த புக்கிர்க்கும் இந்த படத்திற்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. எனக்கும் புரிகின்றது இந்த படம் ஒருசாராரை முற்றிலும் வெறுக்க வைத்தது அதன் வீரியத்தில் , ஏன் ??? என்ற கேள்விக்கு அவரின் அடுத்த படத்தில் நிச்சயம் பதில் இருக்கும் பாருங்கள் மென் பொறியாளர்களை மையம் வைத்து அவர்களின் வாழ்வியலை தான் காட்ட போகின்றார்.

      Delete
  3. படத்திலேயே வந்துவிடுகிறது ஒரே அறையில் ஒன்றாக ஒரே கல்லூரியில் படித்தவர்கள் பின்னர் நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த பிறகு இருக்கும் வேறுபாடு , அதிலும் நல்ல நிலைமையில் இருப்பவர் கேம்பஸ் நேர்முகதேர்விர்க்கு அவரின் அந்த நண்பர் தான் உதவி ஆலோசனை வழங்கி இருப்பார். எந்த படிப்பு படிச்சாலும் எப்படி இருக்க வேண்டும் அதாவுது ஒரே நிலையில் மற்றவர்களை விளக்கி வைத்து ஏன் இருக்க வேண்டும் என்று என் பார்பையில் புரிந்தது நண்பா.... :) :)

    ReplyDelete
  4. பல விவாதங்களுக்கு உரியவர் ராம்.. அவரோட படங்களும் தான்.. நல்ல சினிமாவைத் தந்துடனும்ங்கற வெறில இருக்கறவரு.. ஆனா கற்றது தமிழ் அவர் திரைக்கதையில கொஞ்சம் குழம்பிப் போனது மாதிரி தெரிஞ்சது..!!
    உலகமயமாக்கலை சொல்றதா ? தமிழின் பெருமைகளை சொல்றதா ? இல்ல ஏழ்மையின், வறுமையின் கொடுமையை சொல்றதானு குழம்பி எல்லாத்தையும் இணைச்சு வச்சு கதை பண்ணி சொல்லிருக்காரு.. அந்தப்படம் திரைக்கதையில இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தா இன்னும் நல்லா வந்திருக்குமோனு தோணுது..!! இன்னும் தங்க மீன்கள் பாக்கலை.. ஆனாலும் எனக்கு இவர் மேல நம்பிக்கை இருக்கு..!!

    ReplyDelete
  5. நன்றி தல!!! நிச்சயம் நண்பா இவரின் மேல் நம்பிக்கை பெரிதும் உள்ளது அது அவர் எடுத்த படைப்பு அவர்களை கவரவில்லை என்றாலும் இவரின் படத்தை எதிர்பார்த்தே உள்ளனர். நீங்கள் கூறியது போலவே கற்றது தமிழ் படம் பல விஷயங்களை பற்றி பின்ன பட்டதால் தான் பலரை கவர முடியாமல் போனது ஆனால் அந்த படத்தின் ஆணி வேர் உலகமயமாக்குதல் அனைத்திற்கும் அதுதான் அடித்தளம். அதை கூறவே அனைத்தையும் கையாண்டு இருப்பார். முதல் படத்தில் அப்படி ஒரு இசையை யுவனிடம் பெற்று இருப்பார் . அது காலத்திற்கும் இருக்கும் நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இன்னும் 20 & 30 வருடங்கள் கழித்தும் இந்த படம் பற்றிய பேச்சு இருக்கும். அவரின் அடுத்த படம் எல்லோரையும் கவர்ந்து நல்ல வசூல் நாயகராகவும் பெயர் எடுக்க வேண்டும் பார்ப்போம். :) :)

    ReplyDelete